

சாத்தூர் பேருந்து நிலையத்தில், சென்னை கோயம்பேடு செல்லும் தமிழ்நாடு அரசின் எஸ்.சி.டி.சி பேருந்து புறப்படத் தயாராக இருந்தது.
“சென்னை... சென்னை... கோயம்பேடு..!” நடத்துநர் கூவிக்கொண்டிருந்தார்.
கார்த்தி தோளில் ஒரு பேகோடு, பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தான். நடத்துநரிடம் கோயம்பேட்டுக்கு ஒரு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, இரண்டு பேர் உட்காரும் இருக்கையில், ஜன்னலோர இருக்கையைப் பார்த்து உட்கார்ந்தான். பேக்கை மேலே உள்ள அடுக்கில் போட்டான். பயணிகள் நிரம்பியவுடன் பேருந்து மெல்லக் கிளம்பியதும், ஜன்னல் வழியாக ஈரக்காற்று ஜில்லென்று கார்த்தியின் முகத்தில் பட்டது. ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்து, வேடிக்கை பார்த்தபடி இருந்தான். வாகனங்கள் நெருக்கடியால் பேருந்தானது மெதுவாக ஊர்ந்து சென்றது.
அன்று கார்த்திகை தீபம் என்பதால், எல்லா கடைகளிலும் மற்றும் வீடுகளின் வாசல்படியின் இரு ஓரங்களிலும், முற்றத்திலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. பேருந்தில் வேடிக்கை பார்த்தபடி சென்ற கார்த்தியின் கண்களில் அந்த அகல் விளக்குகள் ஒளிரத் தொடங்கியது. இந்நிலையில் முன்னோக்கிப் போகும் பேருந்திற்கு மாற்றாக, அவனது நினைவுகள் பின்னோக்கி நகரத் தொடங்கின.
சிறுவயதாக இருக்கும்போது, கார்த்திகையில் அம்மாவுடன் சேர்ந்து விளக்கு ஏற்றும்போது விரல் சுட்டவுடன் அம்மா, விரலை வாயில் வைத்து சப்பியதும், பிறகு ஊதிவிட்டு, “ஒண்ணும் இல்லை... ஒண்ணும் இல்லை!” என்று சொன்னதும்... அப்படியே அம்மாவுடன் சேர்ந்து வாசற்படியிலும், திண்ணையிலும் விளக்குகளை ஏற்றி வைத்ததும்... பக்கத்திலேயே தங்கச்சி மத்தாப்பினைக் கொளுத்தி இரண்டு கைகளில் வைத்துச் சுற்றியதும்..! இதனை எல்லாம் திண்ணையில் உட்கார்ந்து அப்பா பார்த்து ரசித்ததும்... கார்த்திகைக்கு குடும்பத்தோடு திருவண்ணாமலைக்குச் சென்று, கீழே இருந்த கூட்டத்திற்கு இடையில் அப்பாவின் தோள்மீது உட்கார்ந்து, மலையின் மீது ஏற்றப்பட்ட ஜோதியை வியந்துப் பார்த்ததும்... என்று பல நினைவுகள் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருந்தன.
போனவருடம் கார்த்திகையில் நடந்த அந்தத் துயரச்சம்பவமும் நினைவிற்கு வந்தது.