

அன்று காலையில் எழுந்ததும் தங்களுடைய பூர்வீகத்தை பார்க்க போவதற்கான குதூகலத்துடன் மிகவும் பரபரப்பாக இருந்தனர் ரூபாவும் சுபாவும். ஆமாம் அவர்கள் அவர்களின் அம்மம்மாவின் பூர்வீக வீட்டை பார்க்க மும்பையில் இருந்து கோவை செல்கிறார்கள்.
அந்த வீட்டைப் பற்றி அவர்களுடைய மகன்களுக்கு, அவர்களுமே சலித்து விடும் அளவிற்கு, சொல்லிச் சொல்லி வைத்திருந்தார்கள் ஒரு தெருவையே அடைத்து நிற்கும் பெரிய வீடு, பெரிய திண்ணை, பெரிய ஹால், பெரிய ரேழி என்று சொல்லிச் சொல்லி மாய்வர்கள் அவர்களின் அந்த வீட்டின் பெருமையைப் பற்றி.
கோவைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது அவர்களுடைய தாயாரின் அம்மா வீடு. இவர்கள் இருவரும் ஸ்கூல் லீவில் எப்பொழுதும் அங்கு தான் சென்று தங்குவார்கள். அது ஒரு பெரிய கடையுடன் கூடிய வீடு.
கிராமங்களில் எல்லாம் எல்லா வீடுகளுக்கும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். அதாவது மச்சு வீடு, பெரிய வீடு, மதில் வீடு என்று. இவர்கள் வீட்டிற்கு கடை வீடு என்றும் திண்ணை வீடு என்றும் பெயர் உண்டு.
ஏனென்றால் இரண்டு பாய்களை போட்டு படுக்கும் அளவிற்கு, சாய்மானத்துடன் கூடிய பெரிய திண்ணைகளும், பெரிய பெரிய தூண்களும் பெரிய சட்டங்களுடன் இருக்கும். அந்த வீட்டை பார்த்தாலே தெரியும் அதன் கம்பீரம்.