

"பைக் சாவியை எடுத்துக் குடுன்னு கேட்டா... நீங்களே தேடிக்கோங்க, ஆஸ்பத்திரிக்கு போகணும்குற! சம்பாதிக்கிற திமிர், அப்படி பேச சொல்லுது!” பொரிந்தான் சுந்தர். காதில் வாங்காமல் கிளம்பினாள் சியாமளா.
மாலை வீடு திரும்பிய பின்னால், "காலை ஏன் பைக் சாவியை எடுத்துக்குடுக்கல?" ஆரம்பித்தான் சுந்தர். "ஆஸ்பத்திரிக்கு சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல...” - சியாமளா.
"எங்க கம்பெனில, வெயிட்டான பொருட்கள் தூக்கற மாதிரி வேலையா உன்னோடது! உனக்கு ஆஸ்பித்திரில சின்ன வேலைதானே! அதுவும் இஸ்திரி போட்ட பளபளப்பான வெள்ளை நிற ஆடை, பார்க்கவே பளிச்ன்னு இருக்கும். எங்கள மாதிரி அழுக்கு சட்டையா? ஆடை கசங்காம வேலை, என்ன மாத்திரை தர்றது, மருந்து குடுக்குறது இப்படி சின்ன சின்ன வேலைகள் தானே? அது இல்லாமல் உங்களுக்கு துணையாக ஆயா வேலைக்கு ஆள். எங்களுக்கு அப்படியா?" என்று அவளின் வேலைத் தன்மையை புரிந்துக் கொள்ளாமல் விவாதம் செய்தான்.
"என்னது? ஆஸ்பித்ரில சின்ன வேலையா? நான் வேலை செய்யறது 'லேபர் வார்டு' அங்க நாங்க படுற அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும். லேபர் வார்டில் உங்களை மாதிரி ஆம்பளைங்க, அரை நொடி கூட தாக்கு பிடிக்க மாட்டீங்க. பேசறாரு பேச்சு“ என வாதம் செய்ததோடு மனதிற்குள் தனது வேலையின் கஷ்டத்தை இவருக்கு உணர வைக்கணும் என தீர்மானித்தாள்.
”ஆம்பளங்களை லேபர் வார்டுல விட மாட்டாங்களே!" மடக்கினான் சுந்தர்.
”அதுக்கும் ஒரு வேளை வரும். அப்ப பாத்துக்கலாம்...” வாக்குவாதங்களிடையேயும், மல்லிகை பூ மணக்க, அல்வா இனிக்க, தாம்பத்யம் அரங்கேறியது.
*************
தாயாகப் போவதை பறை சாற்றியது அவளின் பெரிய வயிறு. பெருத்த வயிற்றோடு, ஆஸ்பத்திரியில், லேபர் வார்டில் வேலை செய்தாள் சியாமளா. சீப் டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது,
”வணக்கம் டாக்டர், ஒரு சின்ன ரிக்வஸ்ட். எனக்கு டெலிவரி ஆகும்போது, என் புருஷன் கூட இருக்கணும். அதுக்கு உங்க பர்மிஷன் வேணும்.” என்று கேட்டாள். ”நோ, நோ! இதென்ன புது பழக்கம், ரூல்ஸை மீற முடியாது” என்று மறுத்தார் டாக்டர். சியாமளா கெஞ்சினாள். சியாமளாவின் சின்சியரான வேலைக்கு ”ஓகே" என்றார் டாக்டர்.
பர்மிஷன் வாங்கிய பத்தாவது நாளில், சியாமளா பிரசவ வலியால் துடித்தாள். சுந்தர் பதை பதைத்து ஆட்டோவில் ஏற்றி, சியாமளா வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்கே கூட்டிப் போனான். முறையான ஏற்பாடுகளுக்கு பிறகு, சீப் டாக்டர் வந்து, "மிஸ்டர் சுந்தர், உங்க மனைவிக்கு டெலிவரி ஆகும் போது நீங்க கூட இருங்க, இது அவங்க ஆசை. யாருக்கும் லேபர் வார்டில் பர்மிஷன் கிடையாது. சியாமளா கேட்டிருக்கா, ஏதாவது விஷயம் இருக்கும்.” என்று அனுமதித்தார்.
சியாமளா பிரசவ வலியால் துடிதுடித்தாள். 'இதெல்லாம், பெண்களுக்கு இயல்பான ஒன்றுதானே' என்று மனசுக்குள் கூறிக் கொண்டான். நேரம் கூடகூட, வலியால் துடித்து டாக்டர்களும், செவிலியர்களும் சேர்ந்து, சுகப்பிரசவம் ஏற்பட உதவி செய்தனர். பிரசவ வலியால் துடித்தாள், மயங்கினாள். அவளுக்கு இரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது.
இரத்தப்போக்கு வெளியேற, கூடவே உடலில் இருந்து கழிவுகளும் வெளியேற்றி ஒருவித துர்நாற்றம் வெளிப்படுத்தியது. இருந்தாலும், செவிலியர்கள் இயல்பாகவே வேலை செய்தனர். அங்கிருந்த சுந்தருக்கு, மனைவியின் பிரசவ வேதனை மனதை இளக்கியது.
தாயின் வேலைக்கு முன்னால், உனது வேலை ஒன்றுமே இல்லை என்பதை “குவா குவா” சத்தத்தோடு உணர்த்தியதை அப்போதுதான் உணர்ந்தான் சுந்தர்.