

“முருகா குட் மார்னிங்…!”
“காலை வணக்கம்…”
“அப்பா... உன்னைக் காண தவம் இருந்தேன். இன்றுதான் அது நிறைவேறி உள்ளது!”
“ஓ…! அப்படியா?”
“ஆம் முருகா… எனக்கு நீ என் நண்பன் போல. உன்னை நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். சதா உன்னைப் பற்றி மட்டுமே ஞாபகம்!”
“ஏன் வேலை கிடைக்கவில்லையா…?”
“இல்லை தோஸ்த்…! மனம் முழுக்க வேதனை மட்டுமே…”
“முயற்சி செய்து பார்.”
“நான் எல்லா வேலைகளுக்கும் விண்ணப்பம் அனுப்பி வைக்கிறேன். ஆனால், எதுவும் நடப்பது இல்லை. ஏன்..? என்று புரியவில்லை. குடும்பத்தில் நான் ஒருவன்தான். அம்மா - அப்பா நன்கு என்னை கவனித்துக்கொள்கிறார்கள்.”
“ம்ம்… மேலே சொல்லு...”
“எம்.ஏ. படிக்கும்போது எழுந்த சந்தேகம்?”
“என்ன சந்தேகம்?”
“லெமூரியா கண்டம், கண்டம் விட்டு கண்டம் என்று (continental shift) நடந்தபோது தென் மதுரை, இலங்கை எல்லாம் உரு மாறியதாமே!”
“ஆம்… ஆம்… நீ நம்புகிறாயா?”
“மை டியர் முருகா, நான் படித்தது யூக வரலாற்று செய்தியில்…
தென் மதுரை மையமாக முதல் தமிழ் சங்கம் இருந்தது என்றும்… சிவன், நீ, அகத்தியர் போன்றோர் அங்கே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா?”
“ஆம். உண்மைதான். இந்தச் செய்தி முக்கியமான ஒன்று…!”
“தோஸ்த்… ஆதாரம் இல்லையே?”
“யார் சொன்னது?”
“இல்லை... பாடத்தில்கூட யூக வரலாறு என்றே சொல்லப்பட்டு உள்ளது.”
“ஆம். அதற்கான ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை… !”
“தோஸ்த்… ஆதாரம் இருக்கா?”
“நிச்சயமாக… 100% நிச்சயம்..!”
“எங்கே இருக்கிறது… ?”
“சந்தேகம் இல்லை… மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளது!”
“ஏன் அதை இன்னும் ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை…?”
“உனக்கு ஆர்வம் இருக்கிறதா?”
“முருகா... சத்தியமாக எனக்கு ஆர்வம் உண்டு… !”
“நீ எம்.ஏ. முடித்துவிட்டாய் அல்லவா?”
“ஆம். அதற்கு என்ன?”
“நீ ஆராய்ச்சி செய்ய தகுதி உள்ளவன்!”
“ஆனால் பணம் அதிகம் என்னிடம் இல்லை… !”
“கவலைப்படாதே… பணம் ஒரு பிரச்னை இல்லை..!”
“முருகா எனக்கு ஒன்றும் புரியவில்லை!”
“நேரம் வரும்போது நீயே அறிந்துகொள்வாய். முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய காரியங்களைக் கவனி. பின்னர் நீயே எல்லாவற்றையும் சரியாக செய்வாய்… !”
“முருகா… எனக்கு நிம்மதி என்பதே இல்லை. இதுதான் உண்மை…”
“யாமிருக்க பயம் ஏன்?”
“முருகா… நான் உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!”
“பாரு, உனக்கு அதிமுக்கிய வேலை உள்ளது. எதைப் பற்றியும் கவலைப்படாதே?”
“முருகா... ஐ லவ் யூ!”
“தெரியும்…”
“அப்போ நான்… .!”
“என்றும் எங்கும் எப்போதும் உனக்குள் குடியிருந்து உன்னைச் சிரமம் இன்றி சீரும் சிறப்பாக இயக்கி வைக்கிறேன்…”
“முருகா இது என் தியானம் ஸ்லோகம் ஆனதே…”
“ஏன் நான் புரிந்துகொள்ள மாட்டேனா…?”
“தோஸ்த்.. நீ பெரிய ஆள்!”
“சரி… நான் வருகிறேன்.”
சட் என்று நான் விழித்தேன். நான் கண்டது கனவா…? நிச்சயமாக இல்லை. எப்போதும் 4 மணிக்கு எழுந்துவிடும் நான் இன்று மீண்டும் படுத்து தூங்கிவிட்டேன். இப்போது மணி 6. குளித்துவிட்டு வடபழனி முருகனைக் காண புறப்பட்டுவிட்டேன். நல்ல தரிசனம். இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்ய பதிவு செய்யப் போகிறேன்.
பின் குறிப்பு: இது ஒரு சர்ரியலிச உரையாடல் (Surrealist dialogue). 20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஒருவித இலக்கியம். அதாவது அப்படியே அடிமனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லுவது.