

“வரு, என்ன பண்றே நீ...?”
கீர்த்திஸ்ரீக்கு பதட்டத்தில் என்ன செய்வது எனத் தெரியவில்லை. பின்னால் சீரான இடைவெளியில் வந்துகொண்டிருந்த வண்டிகள் ஹாரனிட்டு அலற. உடனே சுதாரித்து காரை இடது ஓரத்தில் நிறுத்தினாள்.
சில நொடிகள் பேசாமல் மகளின் முகத்தையே பார்த்தாள்.
வர்ஷிகா தன் கைகளை வெறித்துக்கொண்டிருந்தாள். விரல்களின் மடக்குப் பகுதியில், இரண்டு இடங்களில் மேல் தோல் லேசாக விலகி ரத்தம் ‘வரலாமா’ என அனுமதி கேட்டு தயங்கி நின்றது.
கீர்த்திஸ்ரீ தண்ணீர் பாட்டில் எடுத்து மகளிடம் நீட்டினாள்.
“இந்தா குடி...”
வர்ஷிகா மறுக்க விருப்பம் இல்லாது அதை வாங்கி, ஆனால் குடிக்க மனமில்லாது வைத்துக்கொண்டாள்.
”என்னதான் பிரச்னை உனக்கு வரு. உடைச்சுப் பேசு. ஏதாவது தப்பு நடந்துடுச்சா. யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா உன்னை.. அண்ணனா. அப்பாவா? என்ன நடந்தது?”