

கஃபேயில் கூட்டமில்லை. வர்ஷிகா எதுவும் பேசாமல் உள்ளே போய் யாரோபோல மூலையில் உட்கார்ந்துகொண்டாள்.
நாய்க்குட்டி போல தொடர்ந்த கீர்த்திஸ்ரீ அவளுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு மகளை முறைத்துப் பார்த்தாள். “என்ன பிரச்னை வரு உனக்கு? அம்மாகிட்ட சொல்லமாட்டியா..? உன் கோபத்துக்குக் காரணம் தெரிஞ்சாத்தானே பதில் கிடைக்கும்...? உதவமுடியும்...”
வர்ஷிகா அம்மாவைப் பார்த்தாள். கீர்த்திஸ்ரீயின் கண்களில் உண்மை இருந்தது. மகளின் துயரம் தீர்க்கும் ஆவல் தெரிந்தது.
‘நீதான் பிரச்னை, உன் மோசமான இறந்தகாலம் என் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நாசப்படுத்திக்கிட்டு இருக்கு...’
சொல்லலாமா? புரிந்துகொள்வாளா?
கொள்வாள்.
இதெல்லாம் பலவிதங்களில், பல வடிவங்களில் ஏற்கனவே அவள் சந்தித்ததுதான். பழக்கமானதுதான்.
ஆனால் மகளுக்கு... அவள் விருப்பப்பட்ட வாழ்க்கை அமைய தான் தடையாக, எதிராக இருப்பதை உணர்ந்து வருத்தப்படுவாளா? படலாம். பட்டு..? என்ன ஆகப்போகிறது அதனால்?
இதைச் சரிசெய்வதற்கான வழிகள் இவள் கைவசம் இருக்காது. மிஞ்சிப்போனால் ‘நான் பேசிப் பார்க்கட்டுமா..?’ எனக் கேட்கலாம். பேசினால் இது சரியாகிவிடும் சிக்கலா? அதுவும் இவள் பேசினால்?