

வர்ஷிகாவின் திடீர்க்கோபத்தை, கொந்தளிப்பைப் புரியாமல் பார்த்தார் சந்திரசேகரமூர்த்தி.
கீர்த்திஸ்ரீ மகளை அதிர்ச்சியுடன் “என்னடி..?” என்றாள்.
வர்ஷிகா வாய்ப்பை வீணாக்காமல் “என் அம்மாவை ஏன் இப்படி ஒரு ஆபாச அடையாளம் ஆக்கினீங்க? எங்கே போனாலும் இன்னார் மகளான்னு எங்க மேல விழற அசிங்கமான பார்வையை சந்திக்க முடியாம நாங்க எவ்வளவு கூனிக் குறுகி உடைஞ்சு போறோம் தெரியுமா! உங்களால நாங்க படற வேதனை, அடையற கேவலம் கொஞ்சநஞ்சமல்ல. பெத்தவங்களைப் பத்தின விவரங்களைக்கூட தைரியமா வெளிப்படுத்த முடியாத கோழையா தலைகுனிஞ்சு வாழறோம் சார். ஏன் இப்படிப் பண்ணினீங்க?”
அவருக்கு அவளது வேகப் பேச்சு புரிய சில நொடிகள் ஆனது. இப்படி ஒரு குற்றச்சாட்டு, இத்தனை வருடங்கள் கழித்து தன் மேல் சுமத்தப்படுவது சங்கடத்தை, அதிர்ச்சியை உண்டாக்க, திகைத்து அமர்ந்திருந்தார்.
கீர்த்திஸ்ரீயோ பதற ஆரம்பித்தாள். தன் மேல் உள்ள கோபத்தை இவர்மேல் காட்டுவது என்ன நியாயம்? இவரென்ன செய்தார்.. கீர்த்திஸ்ரீயை உலகறியச் செய்தது ஒரு தவறா? இத்தனை வசதிகள் எங்கிருந்து வந்தன, யார் கொடுத்த வாய்ப்பால்? அத்தனையையும் அனுபவித்துக்கொண்டு...