

மகாபாரதப் போரில் அமைக்கப்பட்ட 'சக்கர வியூகம்' பற்றி கேள்விப்பட்டிருப்போம். பழங்கால போர் முறைகளில் தற்காப்பு வியூகமாக சக்கர வியூகம் பயன்படுத்தப்பட்டது. 'பத்ம வியூகம்' எனவும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு. மகாபாரதப் போரில் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மட்டுமே சக்கர வியூகம் (Chakra viyugam) பற்றி முழுமையாக அறிந்தவன்.
மகாபாரத யுத்தம் உக்கிரமாக நடந்து பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருந்த பொழுது, துரோணாச்சாரியார் படை தலைவர் பொறுப்பை ஏற்றார். தர்மனை சிறை பிடிக்க வியூகம் வகுக்குமாறு துரியோதனன் துரோணரிடம் கூறினான். ஏனெனில் தருமன் பிடிபட்டால், பாண்டவர்கள் சரணடைந்து மகாபாரதப் போர் முடிவுக்கு வரும் என்ற எண்ணத்தில் சக்கர வியூகம் தருமனுக்காக வகுக்கப்பட்டது. ஆனால், அர்ஜுனன் தர்மரைக் காப்பாற்றினான்.
சக்கர வியூகம் மொத்தம் ஏழு அடுக்குகள் கொண்ட சுருள் வடிவ அற்புதமான அமைப்பாகும். ஒரு சுற்றில் உள்ள வீரர்களை எதிர்கொண்டு சாய்த்து அடுத்த சுற்றுக்கு சென்று வெளியே வந்து விடுவோம் என நினைக்கும் போது அந்த சுற்றில் மறுபடியும் வீரர்கள் வந்து நிற்பதோடு ஒவ்வொரு சுற்றிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இதேபோல் நாம் மூன்று சுற்றுகளைக் கடந்து நான்காவது சுற்றிக்குள் நுழைந்து வெற்றி பெற்று விடுவோம் என நினைக்கும் பொழுது சுழன்று கொண்டே இருக்கும் இந்த வியூகத்தில் வீரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றிலும் அதிகமாகி ஏழாவது சுற்றுக்குச் செல்லும் பொழுது ஏழு மடங்கு பலம் தேவைப்படும். ஆனால், நாம் அந்த இடத்திற்கு செல்லும்பொழுது முழு பலத்தையும் இழந்திருப்போம்.
இந்த சக்கர வியூகம், "நாம் காண்பதெல்லாம் உண்மை அல்ல. உண்மையை நாம் காண்பதில்லை" என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் மரண வியூகமாகும்.
1/7 என்ற கணக்கின்படி, சக்கர வியூகத்தை மதிப்பிட வேண்டும்.1/7=0.142857142857 என்ற எண் திரும்பத் திரும்ப வரும். இதன்படி சுழன்று கொண்டே இருக்கும் சக்கரத்தில் ஒவ்வொரு அடுக்கை கடக்கும் பொழுதும் ஒரு எண்ணை கூட்டிக் கொள்ள வேண்டும். இந்த கணக்கின்படி தான் ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
மகாபாரத குருசேத்திரப் போரின் 13 ஆம் நாளில் அர்ஜுனன் மகன் அபிமன்யு ஏழு அடுக்கில் உள்ள வீரர்களையும் சாய்த்து சக்கர வியூகத்தின் மையப் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்தான். அதனால்தான் அபிமன்யுவின் புகழ் இன்று வரை ஓங்கி காணப்படுகிறது.
பண்டைய காலத்தில் இருந்தே போர் முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும், ஆன்மீகத்திலும் கணிதத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தியே வாழ்க்கை முறையை நடத்தி வந்திருக்கின்றனர் என்பதற்கு இந்த சக்கர வியூகமே சான்று.