

சினிமா என்றால் மிகப் பெரிய விஷயம். ஸ்டார்கள் நாயகனாக, நாயகியாக நடிப்பார்கள்; அவர்களுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம். திரைக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் கிட்டத்தட்ட நல்ல சம்பளமே கிடைக்கிறது. ஆனால், துணை நடிகர் மற்றும் துணை நடிகைகளின்(supporting actors) சம்பளம் எவ்வளவு? நாள் ஒன்றுக்கு 500 ரூபாயைத் தாண்டாது. இதிலும் 100 ரூபாயைப் புரோக்கர் எடுத்துக் கொள்வார். மாதத்தில் குறைந்தது 20 நாட்கள் வேலை கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் வெறும் 4 அல்லது 5 நாட்கள்தான் வேலை இருக்கும்.
முன்பு துணை நடிகர், நடிகைகள் இல்லாமலும் சில படங்கள் வெளிவந்துள்ளன. மூன்றாம் பிறை, மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு என்று பல வெற்றிப் படங்களில் துணை நடிகர்கள் அதிகமில்லை. ஆனால், இப்போது ஆட்டம், பாட்டம் இல்லாத படங்களே இல்லை. பாடலுக்கு நாயகியுடன் ஆடுவது துணை நடிகைகள்தான். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவர்கள், வேறு வழியின்றி துணை நடிகையாக நடித்து - ஆடி - வருகிறார்கள்.
அவர்களின் வேலை மிகவும் கஷ்டமானது. மற்ற கலைஞர்களுடன் ஒருசேர ஆட வேண்டும். தங்கள் முகம் திரையில் வராதா என்று கனவு காணும் இவர்களது இடை, மார்பு, கால், கை என உடல் உறுப்புகள் 'பிட்டு பிட்டாகவே' சினிமாவில் தோன்றும்.
துணை நடிகர்களுக்கும் இதே நிலைதான். சண்டைக் காட்சிகளிலும் துணை நடிகர்கள் நடிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. பாவம்... பணக் கஷ்டம்! அவர்களை நாயகன் போட்டுத் தள்ளுவார்.
வன்முறை மற்றும் பாடல்கள் இல்லாமல் வெளிவரும் படங்கள் இப்போது மிக மிகக் குறைவு. சில பெண்கள் போதுமான வருமானம் இல்லாததால் விபச்சாரியாக மாறிவிடுகிறார்கள்; ஆண்கள் போதைப் பொருள் விற்று வயிற்றுப் பிழைப்பைச் செய்கிறார்கள். என்ன கொடுமை இது? சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. எல்லோரும் இந்தத் துறையில் சேர விரும்பி கோடம்பாக்கம் வருகிறார்கள். ஆனால், வாழ்க்கை அவர்கள் கனவு கண்டதுபோல் இருப்பதில்லை; வாழ்வாதாரமே பெரும் கேள்விக்குறி ஆகிவிடுகிறது.
சண்டைக் காட்சிகளில் நடிக்கும் துணை நடிகர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது. வறுமையால் அவர்கள் இன்சூரன்ஸ் கூட எடுத்திருக்க மாட்டார்கள். நாயகன் அடிக்கும் அடியில், அவர்கள் ஒரு சுழற்சி செய்து கண்ணாடி மீது மோதி, தூள்தூளான கண்ணாடிக் கதவை உடைத்துக்கொண்டு வெளியே விழுவார்கள். பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் உடலை வருத்தித்தான் நடிக்கிறார்கள்.
அடுத்து குரூப் சாங்ஸ் (Group Songs). ஆணும் பெண்ணும் நாயகன் மற்றும் நாயகியைச் சுற்றிச் சுற்றி வந்து தங்கள் திறமையைக் காட்டுவார்கள். பல துணை நடிகர், நடிகைகளுக்குப் பிடிக்காமல்தான் வயிற்றுப் பிழைப்பிற்காக ஆடுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். இவர்கள் இல்லாமல் இப்போது ஒரு படமும் வருவதில்லை.
துணை நடிகர், நடிகைகள் எப்போதும் பட வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் மற்றும் வன்முறை இல்லாமல் படம் வருவது அரிதிலும் அரிது என்பதால், இவர்களது வாழ்வில் பெரும் மாற்றம் வராவிட்டாலும், ஓரளவு தங்கள் பிழைப்பைப் பார்த்துக்கொள்கிறார்கள்.
இவர்கள் மட்டும் இல்லை; திரைக்குப் பின் பல்வேறு தொழிலாளர்கள் உள்ளனர். லைட் மேன், கேமரா உதவியாளர்கள், தையல்காரர்கள், லாண்டரி ஆட்கள், ஸ்டில் போட்டோகிராஃபர், வாகன ஓட்டிகள், மெஸ் உதவியாளர்கள், உதவி இயக்குநர்கள் என்று பட்டியல் நீளுகிறது. இவர்கள் வாழ்க்கை நடத்தத் தேவையான போதுமான சம்பளம் கிடைப்பதில்லை.
படம் வெற்றி அடைந்தால் தயாரிப்பாளருக்குத் தான் லாபம்; நாயகன், நாயகிக்குத்தான் கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கிறது. இதில் நியாயமே இல்லை!