

அரசியல் வானில்!…
vijay-political-victory-poem-tamil
அரசியல்வானில் அதிரடி இடிமுழக்கம்!
வீழுந்தது ஆட்சி விஜயின் கையில்!
ஆண்டகட்சியும் ஆளத் துடித்ததும்
இரண்டு மூன்றாம் இடங்கள்தனிலே!
அனுமானித்தவர்கள் அனைவரும் வியக்க
அத்தனையையும் தாண்டி அதிரடியாக
வெற்றிப்பெருமழை நாடெங்கும் பெய்ய
வியப்பில் சரித்திரம் உறைந்தேபோனது!
பன்னிரண்டு சீட்டுகள் கூடியிருந்தால்
பத்தாம்தேதி வரை காத்தலின்றி
நேரு ஸ்டேடியம் நிம்மதியாக
முன்னதாகவே முடிசூட்டி மகிழ்ந்திருக்கும்!
ஒற்றைக் கையில் ஓசைவராது!
கூட்டணி சேர்ந்து கும்மியடித்தலே
நாட்டுக்கு நல்லது என்றுகருதியே
பெரும்பான்மையைப் பெறாமல் செய்து
சிறிதாய் ட்விஸ்டைச் செய்துவிட்டனரோ?!
அரசியலாரே அடிக்கும் ட்விஸ்டை
வாக்காளர்கள் வகையாய் இம்முறை
அடித்தே விட்டனர் அகிலம்வியக்க!
உச்சநடிகராய் உயர்ந்து நின்றவர்
பச்சாதாபத்தைப் பாமரர் மீது
அதிகமாய்ச் செலுத்தி அன்புகாட்டியதால்
துச்சமென தொழிலைத் துறந்தேவிட்டு
அனலாய்க் கொதிக்கும் அரசியலாற்றில்
குதித்து நீந்திக் கரையேறிவிட்டார்!
இடுப்புத் துணியின் ஈரம்காயுமுன்
கேள்விகள் கேட்டுக் கிறங்கடிக்காதீர்!
புதியவீட்டில் புகும் மணப்பெண்ணுக்குப்
புருஷன் இல்லப் பொதுநடைமுறைகள்
அத்துபடியாக ஆகும் சிலகாலம்!
அரசுக் கட்டிலும் அதுபோல்தானே!
பொறுமையாய் அவரைப் போகவிட்டு
புரிந்துகொள்ள அவகாசம் கொடுத்து
அதன்பிறகல்லவா அவரின் திறமையை
உரசிப்பார்த்தல் உசிதம் ஆகும்!
அறுபத்தியேழில் அண்ணா ஜெயித்து
ஆட்சிசெய்ய அரியணை ஏற…
ஆறுமாதங்கள் அனைத்தையும் நாங்கள்
பொறுமையுடனே கவனித்தே இருப்போம்!
அதற்குப் பிறகே விமர்சனங்களை
வீசச்செய்வோம் என்றாராம் பெருந்தலைவர்!
கர்மவீரரின் கனிவான வழியில்
செல்லலே என்றும் சிறப்பினைநல்கும்!
ஒன்றியமனதுடன் ஒன்றாய் நாமும்
சேர்ந்தே நின்றால் சிறந்திடும்ஆட்சி!