தோல்விகளைத் தாங்க முடியாத இன்றைய இளைஞர்கள்... ஒற்றைக் குழந்தை குடும்பங்கள் தான் காரணமா?

Modern youth mental health
Modern youth mental health Image credit: AI Image
Updated on
Kalki
Kalki

இன்றைய இளைஞர்களிடம் எதைச் செய்தாலும், கைமேல் பலனை எதிர்பார்க்கும் போக்கு காணப்படுகிறது (youth mental health). அவர்கள் எதிர்பார்த்த பலன் அல்லது விளைவு உடனடியாகக் கிடைக்காவிட்டால், மிகுந்த மனச்சோர்வுக்கும், துவண்டு வெளியேறும் மனோநிலைக்கும் செல்கிறார்கள். காத்திருந்து பலனைப் பெறுவது அல்லது மறுபடி முயன்று வெற்றி பெறுவது என்பது பெரும்பாலும் இருப்பதில்லை.

எந்த முயற்சியிலும் படிப்பானாலும், வேலையானாலும், ஏன் திருமணப் பந்தத்தில் கூட இதே நிலையையே எடுக்கிறார்கள்.

சமீபத்திய சில தரவுகளைப் பார்ப்போம்:

2023-ஆம் ஆண்டில், குறைந்த மதிப்பெண்கள் மற்றும் பெற்றோரின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் 13,892 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்றில், 47% தொழிலாளர்கள் திடீர் ராஜினாமாக்களைச் செய்துள்ளனர். தற்போதைய பணியிடப் போக்குகள், 'பழிவாங்கும் விலகல்' என்ற போக்காகச் சொல்கிறார்கள். ஊழியர்கள் மனச்சோர்வு, நச்சுத்தன்மை வாய்ந்த சூழல்கள் அல்லது தாங்கள் மதிக்கப்படவில்லை என்ற உணர்வு போன்ற காரணங்களால் வேலையை விட்டு விலகுகின்றனர்.

இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 35% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் அதிகரித்த நிதிச் சுதந்திரம், களங்கத்தைக் குறைக்கும் மாறிவரும் சமூக நெறிகள், துணைக்கான உயர்ந்த எதிர்பார்ப்புகள் மற்றும் பொருந்தாமை அல்லது துன்புறுத்தும் உறவுகளுக்கான சகிப்புத்தன்மை குறைதல் ஆகியவை இந்தப் போக்கிற்குக் காரணமாக அமைகின்றன.

இந்தியாவில், குறைந்த தேர்வு மதிப்பெண்கள், காதல் முறிவுகள், சிறு நிதிப் பின்னடைவுகள் அல்லது பணியிடத்தில் ஏற்படும் கண்டனங்கள் போன்ற சிறிய இழப்புகள், விரக்தியைத் தாங்கிக்கொள்ளும் குறைந்த திறன், அதிக சமூக அழுத்தம் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளின் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இளைஞர்களைத் தற்கொலைக்குத் தள்ளுகின்றன. இந்தியாவில் தற்கொலைகள் பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு நிகழ்கின்றன; மேலும், 40%க்கும் மேற்பட்ட தற்கொலைகள் 30 வயதுக்குட்பட்டவர்களிடமே நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் - எங்கே இருக்கிறது? நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்!
Modern youth mental health

இந்த விடுபடும் போக்கிற்கு ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் கோட்பாடும் பல விதங்களில் காரணமாக அமைகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

ஒரே ஒரு குழந்தையை பெறுவது என்பது, அளவுக்கு அதிகமாகக் செல்லம் கொடுப்பதால், தனக்கு எல்லாம் உரிமையுண்டு என்ற வலுவான எண்ணம் தோன்றவும், மோசமான உணர்ச்சிக் கட்டுப்பாடு, குறைந்த மன உறுதி மற்றும் சுதந்திரமின்மை உள்ளிட்ட கடுமையான வளர்ச்சிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. உடன் பிறந்தவர்கள் இல்லாத நிலையில், இந்தக் குழந்தைகள் உடனடிப் பலனை எதிர்பார்த்து பகிர்ந்துகொள்ளும் போக்கு குறைகிறது. இது சக வயதினருடனான மோதல்களுக்கும் சமூகத் தனிமைக்கும் வழிவகுக்கிறது.

அதீத பாதுகாப்புடன் கூடிய பெற்றோர் வளர்ப்பு, சார்புநிலையை ஏற்படுத்தி, முடிவெடுப்பதில் சிரமப்படுவதோடு, அடிப்படை சுயசார்பைக் கற்றுக்கொள்ளாமலும் அல்லது அதை ஏற்க மறுத்தலும் நிகழ்கிறது.

உலக மனநலப் பராமரிப்பு சங்கத்தின் கூற்றுப்படி ஒற்றைக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் விரக்தியைத் தாங்கிக்கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். அவர்கள் விரும்பியதை விரும்பிய நேரத்தில் பெறாதபோது, உணர்ச்சிகளைக் கையாள்வதில் சிரமப்படுகிறார்கள் என்று கூறுகிறது.

உடன்பிறப்புகளுக்கு இடையேயான இயல்பான போட்டி இல்லாததால், அவர்கள் தோல்வி, விமர்சனம் அல்லது பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றைச் சமாளிக்க சிரமப்படுகிறார்கள். அவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் மாறவும் இது தூண்டுகிறது. இந்த மனப்போக்கு சமூக உறவுகளைத் தடுத்து, அவர்களைத் தனிமையாகவோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவோ உணர வைக்கிறது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், தொழில் மீதான கவனம் மற்றும் பெண்களின் அதிகரித்த தொழிலாளர் பங்களிப்பு ஆகியவை ஒற்றைக் குழந்தை குடும்பங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளன.

இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாடுகளில், அதிக கல்விச் செலவுகள் மற்றும் குழந்தையின் தரத்தில் செய்யப்படும் முதலீடுகள் காரணமாக, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் பெருகிய முறையில் ஒற்றைக் குழந்தையுடன் நிறுத்திக்கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
Interview: இணையத்தில் தனிநபர் மீதான அத்துமீறல்கள்: சட்டம் என்ன சொல்கிறது? - வழக்கறிஞர் வெங்கடேஷ் விளக்கம்!
Modern youth mental health

வருமானம், வேலை நிலைமைகள், வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அடிப்படைப் பொருள் தேவைகளில் அதீத கவனம் செலுத்துதல். எதிர்காலம் உள்ளிட்ட 'உயர்நிலை' தேவைகளின் எழுச்சி என்று காரணிகளை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் சமூக ஆய்வாளர்கள்.

1953-ல் கொரியப் போர் முடிவடைந்த பிறகு, பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடிமகனும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தென்கொரிய அரசாங்கம் பரிந்துரைத்தது. 1980 முதல் 2015 வரை, சீனாவின் ஒரு குழந்தை கொள்கை, பெரும்பாலான பெற்றோர்கள் ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள கட்டுப்படுத்தியது.

இந்தியாவில், நாடு தழுவிய இரண்டு குழந்தைகள் சட்டம் இல்லை, ஆனால் பல மாநிலங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் குறிவைத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்றன. குறிப்பிட்ட வடமாநிலங்களில் ஊக்கத்தொகை அடிப்படையிலான மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன.

ஒற்றை குழந்தையாக இருந்தாலும், செல்லம் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் செயல்களின் இயல்பான விளைவுகளை அனுபவிக்க அனுமதிப்பதன் மூலம் குணத்தையும் திறமையையும் வளர்க்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த அனுசரணையான அணுகுமுறை மூலம் நாம் சகிப்பு தன்மை, விட்டுக்கொடுத்தல், மீண்டும் முயன்று வெற்றிப்பெறுதல் ஆகிய குணநலன்களை குழந்தைகளிடம் வளர்த்து, மேலே கூறிய பல சமூக அவலங்களை தவிர்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com