

காதலுக்கும் படிகள்..!! ஆமாம். காதல்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு தலை காதல், தெய்வீக காதல், பரஸ்பர காதல், மறை முக காதல், காமம் கலந்த காதல், உண்மையான காதல் இத்யாதி! இத்யாதி! இத்யாதி!
பெண்ணும் ஆணும் ஒருவரோடு ஒருவர் ஈர்க்கப் படுகையில், அது காதலா? காமமா? எனப் புரிவதில்லை. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் காட்டப்படும் கதைகளில் வரும் காதல்களில், பணக்கார வீட்டுப் பெண் ஏழைப் பையனைக் காதலிப்பதும், பணக்கார வீட்டுப் பையன் ஏழைப் பெண்ணைக் காதலிப்பதும், வில்லன் அல்லது வில்லி வந்து கலைப்பதும், பெற்றோர்களே காதலர்களைப் பிரிப்பதும், காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவதும், காதலர்களை ஒன்று சேர்க்க நண்பர்களும், நண்பிகளும் உதவுவதும் அப்பப்பா! அப்பப்பா! இப்படி சுவாரசியமான பல காட்சிகள்!
உண்மையான காதலை, ஐந்து விதமான படிகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும் எனக் கூறப்படுகிறது. அவை என்னென்ன..?
1. ஆரம்பம்:
அண்ணலும் அவளும் பார்க்கையில், மனதிற்குள் "பளிச்" சென BULB எரிந்தால், காதலின் ஆரம்பத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதுபோல என கூறி விடலாம்.
2. நான் - நாம்:
காதல் தொடர்ந்து வளர்கையில், நான் என்பது மறைந்து நாம் என்ற எண்ணம் மனதிற்குள் வரவேண்டும்.
3. மேல் - கீழ்:
காதலர்கள் பேசுகையில், அவன் அல்லது அவள் கூறுவது சரியென்று தோன்றினால், மற்றவர் அதை மனதார ஒத்துக்கொள்ள வேண்டும். எதற்காக ஒத்துக்கொள்ள வேண்டும்? முடியாது. என்னை விட அவள் மேலா? கீழ்தானே எனும் எண்ணம் தவிர்க்கப் படவேண்டும். சரியில்லையெனத் தோன்றினால், எதனால் என்பதை உடனே விளக்கி கூறுவது அவசியம். வீண் வாக்குவாதம், கோபம் தவிர்க்கப் படவேண்டும்.
4. உறுதிப்படுத்துவது:
ஒருவர்க்கொருவர் விபரங்களை மனம் விட்டு பரிமாறிக் கொள்கையில், சந்தேகம், பயம் நீங்கி, நல்லது-கெட்டது தெரிய வர, காதல் உறுதிப்படும். ஒருவராலும் பிரிக்க இயலாது.
5. முடிவு:
காதலிப்பவர்கள் அவரவரது குறை - நிறைகளை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். தளர்ந்து போகையில் தாங்கிப் பிடிப்பது, தேவைப்படுகையில் தைரியம் சொல்வது போன்ற செயல்கள், காதல் கோட்டைக்கு பலமளித்து இல்லறத்தில் சுபமாக முடியும். காதல் காயத்தை ஆற்றும் மருந்தெனலாம்.
காதல் என்பது பாலுணர்வைத் தாண்டிய மெல்லிய புனிதமான உணர்வு என்பதை அறிந்தவர்கள், பொது இடங்களில் கவனமாக, நாகரீகமாக நடந்து கொள்வார்கள். காதலில் ரொமான்ஸ் தேவையென்றாலும், அதை அளவுடன் நேர்த்தியான காதலாக மாற்ற, மேற்கூறிய ஐந்து படிகளும் கை கொடுக்கும்.
"ஹேப்பி வேலண்டைன் டே!"