

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் (Japan First Woman Prime Minister) சனே தகைச்சி. அந்நாட்டின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் பிரதமர் பதவி அவருக்கு வந்தது. சனே தகைச்சி ஜப்பான் நாட்டின் நாரா பிராந்தியத்தில் உள்ள யமாட்டோ கோரியாமா பகுதியில் 1961ம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி பிறந்தவர்.
தற்போது 64 வயதுள்ள அவர் தொழில் மேலாண்மை மற்றும் அரசியல் நிர்வாக படிப்பில் பட்டம் பெற்றவர். ஜப்பான் பிரதிநிதிகள் சபைக்கு 1993ம் ஆண்டு முதல் முறையாக சுயோச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகைச்சி. 1996ல் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் இணைந்தார்.
2004ம் ஆண்டு சக பிரதிநிதிகள் சபை உறுப்பினரான டாகு யமமோடோவை திருமணம் செய்தார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் விவாகரத்து பெற்றவர். டாகு-தகைச்சி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் ஆதரவாளரான தகைச்சி அவரது அமைச்சரவையில் உள்துறை விவகாரம் மற்றும் தொடர்புத் துறை மந்திரியாக இருந்தார். பின்னர் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் இருந்தார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராகும் வகையில் ஆளுங்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். 2021 ம் ஆண்டு அதற்கான கட்சி தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2024ல் கட்சி தலைவர் தேர்தலில் முதல் சுற்றில் முதலாவதாக வந்த தகைச்சி பிரதமர் ஷிகேரு இஷிபாவிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். பின்னர் விவசாயத் துறை மந்திரியான ஷின்ஜிரோ கொய்சுமியை தோற்கடித்து, 2025 அக்டோபரில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 19, 2026 அன்று தகைச்சி 'விரைவான தேர்தல்களுக்கு' அழைப்பு விடுத்தார், இது ஜனவரி 23 அன்று கீழ் சபை கலைக்கப்படுவதற்கு வழிவகுத்தது, பின்னர் நாடு தழுவிய வாக்கெடுப்பு பிப்ரவரி 8, 2026 அன்று நடந்தது.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல, மாறாக தனது கட்சியால் நியமிக்கப்பட்டவர் என்பதால், பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே, முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். தான் தலைமை தாங்கத் தகுதியானவரா என்பதை "இறையாண்மையுள்ள மக்களிடம்" முடிவு செய்ய விரும்புவதாக அவர் கூறினார். நடந்த தேர்தலில் தகைச்சி சுமார் 70% என்ற சாதனை அளவிலான பிரபல மதிப்பீடுகளைப் பெற்று மகத்தான சாதனை புரிந்துள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள், சனே தகைச்சி நாட்டின் இளம் வாக்காளர்களை மொத்தமாக வசப்படுத்தினர். பிரதமர் சனே தகைச்சி பயன்படுத்தும் கைப்பைகள் முதல் இளஞ்சிவப்பு நிற பேனாக்கள் வரை, எதிர்பாராத விதமாக இளையோரைக் கவர்ந்த பொருட்களாக மாறியுள்ளன.
"அவர் தன்னை மார்க்கெட்டிங் செய்து கொள்வதில் ரொம்ப கெட்டிக்காரன்னு நான் நினைக்கிறேன்" என்கிறார் 24 வயது தகைச்சி ஆதரவாளர்.
"அவருக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது, அவருடைய கொள்கைகள் தெளிவாகவும் உள்ளது, ஜப்பானைப் பாதுகாக்க அவருக்கு வலுவான விருப்பம் இருக்கிறது" என குறிப்பிடுகிறார் ஒரு பெண்மணி .
சமூக ஊடகங்களை அவர் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியது தகைச்சியின் பிரபலத்திற்கு பங்களித்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
"இளம் வாக்காளர்கள் எளிமையான, நேரடியான கருத்துக்களுக்கும், கொள்கைகளை முன்னோக்கி நகர்த்தக்கூடிய ஒரு தலைவருக்கும் அதிக எதிர்வினையாற்றுகிறார்கள்" என்கிறார் ஒசாகா பொருளாதார பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவர்.
ஜப்பானின் அரசியல் வர்க்கம் வழக்கத்திற்கு மாறாக வம்சாவளியை சார்ந்தது. ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 30 சதவீதம் பேர்கள் பரம்பரை அரசியல்வாதிகள், இது அமெரிக்கா மற்றும் ஜெர்மனியை விட மிக அதிகம்.
ஆனால் தகைச்சி அவர்களில் ஒருவர் அல்ல, அவர் உழைப்பே பிரதானம் என்ற கொள்கையை முன்னிலைப்படுத்துபவர். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றே கூறி வருபவர். தன் செயல்பாடுகளை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தி வருகிறார்.
தகைச்சியை பின்பற்றி தற்போது பல அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் தங்களின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவைகளே அவரின் வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.