காதலர்களின் சின்னமாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் தாஜ்மஹால். எனினும் மாலை மங்கும் வேளையில், யமுனை ஆற்றங்கரையிலே தன்னந்தனியாக யாருக்காகவோ காத்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
தாஜ்மஹாலின் ஓவிய காதல் என்றதும் அழகு, பட்டாம்பூச்சி, வெட்கம், மகிழ்ச்சி போன்ற பல உணர்வுகள் நினைவிற்கு வந்தாலும், அதில் நூலிழை அளவில் சிறிதாக சோகமும் கலந்திருக்கத்தான் செய்கிறது.
வெள்ளைவெளேரென்று இருக்கும் சலவை கற்களாலான தாஜ்மஹாலை பார்த்திருப்பீர்கள். எனினும் அதில் இருக்கும் ஒளியியல் மாயையை அறிந்ததுண்டா?
தாஜ்மஹாலை நோக்கி நடந்து செல்லும்போது அது தூரமாக செல்வது போலவும், இதுவே அதைவிட்டு விலகி செல்லும்போது அருகில் வருவது போலவும் தோன்றுமாம்.
அதிசயமாக உள்ளதல்லவா? ஏனெனில் இது காதலுக்குமே பொருந்துமே! நாம் காதலை தேடி செல்லும்போது விலகி போகும். காதலே வேண்டாம் என்று விலகி சென்றால், நம்மிடம் தேடி வரும். அதை உணர்த்தத்தான் ஒருவேளை இந்த மாயாஜாலமோ என்று தோன்றுகிறது.
வாழ்க்கையில் ஒருமுறையாவது தாஜ்மஹாலை பார்த்துவிட வேண்டும் என்பது பல காதலர்களின் ஆசையாக இருக்கும். தாஜ்மஹால் என்பது கல்லறையோ, கலைநயமோ எப்படி இருந்தாலும், அது காதலுக்கானது என்பது அவர்களின் எண்ணம்.
சாஜஹானுக்கு ஒரு ஆசை இருந்ததாக கூறுவார்கள். அது என்னவென்றால், வெள்ளை சலவை கற்களை கொண்டு தாஜ்மஹால் கட்டியது போலவே யமுனை ஆற்றங் கரையின் இன்னொரு பக்கத்தில் கருப்பு சலவை கற்களால் தனக்காக ஒரு தாஜ்மஹாலை கட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதானாம். இருப்பினும் அவருடைய மகனான ஔரங்கசிப் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டாராம். உலகிற்கு இப்படியொரு அதிசயம் வராமல் போனதற்கு காரணமாக இருந்த ஔரங்கசிப்பை நினைக்கையில் கோவமாக வருகிறது. அப்படி சாஜஹான் நினைத்ததுபோல கட்டியிருந்தால், அது உலக அதிசயமாக இருந்திருக்காது பிரபஞ்ச அதிசயமாக இருந்திருக்கும்.
ஆண்கள் மட்டும்தான் பெண்களை உருகி காதலிப்பார்களா? பெண்ணுக்காக காதல் சின்னமான தாஜ்மஹாலை கட்டுவார்களா? பெண்ணுக்கும் ஆணை உருகி காதலிக்கத் தெரியும். காதலுக்காக நினைவு சின்னத்தை ஒரு பெண்ணாலும் எழுப்ப முடியும். ஆம். அத்தகைய நினைவு சின்னம் இந்தியாவிலேயே உள்ளது. ராணி உதயமதி தன்னுடைய இறந்த கணவனான பீம்தேவுக்காக கட்டிய காதல் நினைவு சின்னம்தான் ராணி கே வாவ் ஆகும்.
சில சமயங்களில் தோன்றுவதுண்டு, ஏன் காதலர்களுக்கு மட்டும்தான் காதலர் தினம் தாரைவார்த்து கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ன? ஏன் காதலில் இருப்பவர்கள்தான் காதலர் தினம் கொண்டாட வேண்டுமா? மனதிலே காதலை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் காதலர் தினத்தை கொண்டாடும் உரிமை பெற்றவர்களே! என்ன சரிதானே?!