

வயது அதிகரித்தாலும் மூளை கற்றல் திறனை இழக்காது என்பதைக் கட்டுரை விளக்குகிறது. நியூரோபிளாஸ்டிசிட்டி காரணமாக புதிய நரம்பு இணைப்புகள் உருவாகி, புதிய மொழி, டிஜிட்டல் புகைப்படம், குயில்டிங், தொழில்நுட்பம் போன்றவற்றை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். ஆய்வுகள், வாழ்நாள் முழுவதும் கற்றல் நினைவாற்றல், தன்னம்பிக்கை, மூளை ஆரோக்கியம், வாழ்க்கை உற்சாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் என கூறுகின்றன.
வயதாக வயதாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியுமா? என்று நினைப்பவர்கள் பலர்.. இளமையில் கற்றுக் கொள்வது எளிது.. வயதாகி விட்டால் நினைவாற்றலும் கற்றுக் கொள்ளும் திறனும் குறைந்து விடும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், இது முழுமையான உண்மை அல்ல.. வயது அதிகரித்தாலும் கற்றுக் கொள்ளும் கதவுகள் மூடப்படுவதில்லை. நாம் திறக்கத் தயார் என்றால் புதிய உலகம் நமக்காக காத்திருக்கிறது..
வயதானாலும் மனித மூளைக்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் திறன் தொடர்ந்து இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. வயது அதிகரிக்கும்போது புதிய தகவலைப் புரிந்து கொள்ள அல்லது நினைவில் வைத்துக் கொள்ள சற்று அதிக நேரம் தேவைப்படலாம் ...
ஆனால் அதற்காக கற்றுக் கொள்ளும் திறன் முற்றிலும் மறைந்து விடுவதில்லை.. மாறாக பல ஆண்டுகளாகச் சேர்த்த அனுபவமும் அறிவும் மூத்தவர்களுக்கு ஒரு பெரிய பலமாக அமைகிறது.. மொழியைப் புரிந்து கொள்வது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுப்பது போன்ற சில திறன்கள் வயதுடன் நன்றாகவே தொடரக் கூடும்..
அப்படியானால் வயதானவர்கள் என்னென்ன புதிதாகக் கற்றுக் கொள்ளலாம்? புதிய மொழி கற்கலாம்.. ஸ்மார்ட் போன் அல்லது கணினியைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளலாம்.. புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசைக்கருவி வாசிப்பது, தோட்டக்கலை மற்றும் சமையலில் புதிய வகைகளைச் சமைப்பது என ஆர்வமுள்ள எந்த துறையையும் தேர்ந்தெடுக்கலாம்.. புதிய திறன்களைக் கற்றுக் கொள்வது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவக்கூடும்..
ஒரு ஆய்வில் (National institute of Aging) 60வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய திறன்களைக் கற்றுக் கொண்ட போது நினைவாற்றலில் முன்னேற்றம் காணப்பட்டதாக தேசிய முதுமை நிறுவனம் (NIA) குறிப்பிடுகிறது.. குறிப்பாக டிஜிட்டல் புகைப்படம் எடுப்பது அல்லது குயில்டிங் போன்ற புதிய சவாலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் நினைவாற்றலில் பயன் பெற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன..
புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது மூளைக்கு மட்டும் அல்ல மனதுக்கும் மகிழ்ச்சி தரும். "என்னால் இதையும் கற்றுக் கொள்ள முடிகிறதே" என்ற நம்பிக்கை நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.. புதிய மனிதர்களைச் சந்திக்கவும், புதிய அனுபவங்களைப் பெறவும் இது வாய்ப்பளிக்கிறது..
உலக சுகாதார அமைப்பும் வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் சமூக தொடர்பு ஆகியவை மூளை ஆரோக்கியத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் அடங்கும் என்று குறிப்பிடுகிறது... எனவே கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடை அல்ல.. ஆர்வமின்மையே உண்மையான தடையாக இருக்கலாம்..
தினமும் ஒரு புதிய வார்த்தை கற்றுக் கொள்வது முதல் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பார்ப்பது வரை சிறிய முயற்சிகளில் இருந்தே தொடங்கலாம்.
வயது அதிகரிக்கும்போது மூளையின் செயல்பாடுகள் மெல்ல மாறினாலும் அதன் கற்றல் திறன் முழுமையாக மறைந்து விடுவதில்லை.. இதற்கு காரணம் "நியூரோபிளாஸ்டிசிட்டி" எனப்படும் மூளையின் நெகிழ்வுத்தன்மை.. புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது மூளையில் புதிய நரம்பு இணைப்புகள் உருவாகின்றன.. அதனால் புதிய மொழியைக் கற்றுக் கொள்வது, புதிர்களைத் தீர்ப்பது, புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வது போன்றவை வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதை விட சவாலான புதிய செயல்களில் ஈடுபடுவது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவக்கூடும். எனவே "இந்த வயதில் என்னால் இதை எல்லாம் எப்படி கற்றுக் கொள்ள முடியும்? என்ற தயக்கத்தை விடுத்து தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்வதே மூளைக்கு கொடுக்கும் சிறந்த பயிற்சி ஆகும்..
வாழ்க்கையின் ஒவ்வொரு வயதும் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தான்.. அதே போல ஒவ்வொரு நாளும் நாமும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம்.. வயது அதிகரிப்பது நம் ஆர்வத்திற்கோ அறிவைத் தேடும் பயணத்திற்கோ முற்றுப் புள்ளி வைப்பதில்லை..
என்னால் முடியுமா? என்ற தயக்கத்தை விடுவித்து "ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது?" என்று நினைக்கும் அந்த ஒரு தருணமே புதிய தொடக்கம் ஆகும்.. வயது உடலுக்கு வரலாம்.. ஆனால் கற்றுக் கொள்ளும் ஆர்வத்திற்கு வயது வர வேண்டிய அவசியமில்லை.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் வயது கற்றலுக்கு தடை அல்ல.. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் மூளையின் அற்புத சக்தியை பயன்படுத்தி புதிதாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்..
சிறிய முன்னேற்றங்களைக் கூட மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வது தன்னம்பிக்கையை வளர்க்கும்.. கற்றல் மீதான ஆர்வமும் அதிகரிக்கும்.. வாழ்க்கையும் உற்சாகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறும்.