வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன. வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அப்பொழுது நம் வாழ்க்கையை மடைமாற்றி எப்படி சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்!
ஒளியை ஏற்ற ஒரு விளக்கு தேவை. அந்த ஒரு விளக்கு பல்வேறு விளக்குகளை ஏற்ற உதவுவதுபோல, ஒரு புன்னகை பல்வேறு முகங்களில் புன்னகையை உருவாக்கும். எனவே, பொன்னகையை விட மதிப்பு வாய்ந்தது புன்னகையே. ஆதலால் நம் எதிரில் வருபவர்களை பார்த்து புன்னகை புரிந்தால், அது நம் உடலுக்கும் ,உள்ளத்திற்கும் நல்லது. ஏன் நம்மை பார்த்துவிட்டு செல்பவர்களுக்கும் அது நல்லதுதானே! அடுத்த முறை அவர்களை பார்க்கும்போது, நம்மை முந்திக்கொண்டு அவர்களாகவே நமக்கு புன்னகை அளித்து, கூடவே ஒரு வணக்கத்தையும் செலுத்திவிட்டுப் போவார்களே!
நீங்கள் உள்ளூர எதன் மேல் ஆர்வம்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் ஆற்றலையும், நேரத்தையும் அவ்வப்போது செலவிடுங்கள். உங்களுக்கு நன்றாக வரைய தெரியும் என்றால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை செய்யலாம். அதை செய்யும்பொழுது இப்பொழுது இது ரொம்ப அவசியமா? இந்த வயதில் நீ வரைந்து எதை சாதிக்க போகிறாய்? என்று யாராவது கேட்டால் அதை எளிதாக கடந்துவிடுங்கள். பதில் எதுவும் பேச வேண்டியதில்லை. அதற்காக நாம் செய்யும் வேலையை நிறுத்தவும் வேண்டியது இல்லை.
எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. ஆதலால் நான் இதைத் தொடர்கிறேன் என்று கூறிக்கொண்டே தொடருங்கள். பிந்தைய நாட்களில் நீங்கள் அதில் பெரிய சாதனைகூட படைக்கலாம்.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடக்கப் போவது நல்லவைகளாக இருக்கட்டும் என்பதன் அடிப்படையில் நடந்தவற்றை பற்றி கவலைகொள்ளாது, நடக்க வேண்டியவைபால் அக்கறை காட்டி செயலாற்றுங்கள். உதாரணத்திற்கு, ஒரே நேரத்தில் கணவனும் மனைவியும் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட நேரிடுகிறது என்றால், அதற்காக கவலைப்பட்டுக்கொண்டே இருக்காமல், வேறு வேலையை தேட முயற்சிக்கலாம். 'தங்களிடம் திறமை இருக்கிறது. தக்க பணியை தேடிக்கொள்ளலாம் என நம்பிக்கை வைத்து, ‘எங்கள் வாழ்க்கை எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது; எங்களது வாழ்க்கைக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்’ என்று உறுதியுடன் செயல்படலாம். பிறருடன் தம்மை ஒப்பிட்டுப் பார்த்து வருந்தாமல், வேறு வேலைக்கு செல்லும்போது மகிழ்ச்சியுடன் செல்லுங்கள். ஊதியம் பெற ஒரு பணி கிடைத்துவிட்டதே என்று கூறி சந்தோஷம் அடையுங்கள். வேலையை விட்டதை நினைத்து வருத்தப்பட வேண்டியது இல்லை.
வீட்டில், உறவினர்கள் வீட்டில், நண்பர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு மகிழ்வு காணுங்கள். அங்கு ஒரு விழா சிறப்பாக நடக்க அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கவனியுங்கள். நல்லனவற்றை மனம் திறந்து பாராட்டுங்கள். இதனால் அவர்களும் மன நிறைவு அடைவார்கள். நமக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும். மேலும் குடும்பம், நண்பர்கள், சொந்த பந்தங்கள் ஆகியோருக்கும் நேரம் ஒதுக்கி செலவழித்தோம் என்ற திருப்தி கிடைக்கும். இது நம்மை நாமே ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும்.
நகைச்சுவை உணர்வு நம் வாழ்வு சிறக்க நன்கு துணைபுரியும். 'நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் நான் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால், நமது நகைச்சுவை உணர்வு பிறர் மனத்தை புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும். நல்ல நூல்கள், இதழ்கள், இணையதளம் ஆகியவற்றின் மூலம் நமது அறிவு மற்றும் உள்ளம் ஆகியவை மேம்படுவதற்கான கருத்துகளை ஏற்றுக்கொள்ளலாம். அதுபோல் அதில் இருக்கும் நகைச்சுவையையும் கவனித்து மற்றவர்களுடன் உரையாடும்பொழுது தக்கசமயத்தில், மேற்கோள் காட்டி அசத்தலாம். அவர்களுக்கும் ஒரு உற்சாகம் பிறக்கும்.
பிரச்னைகள் வாழ்க்கையில் இயல்பானவையே. பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை சுவைக்காது என்று உணர்ந்து பிரச்னைகள் தோன்றும்போது அதை தர்க்கரீதியாக அணுகி படிப்படியாக அவற்றிற்கு தீர்வு காண இறை நம்பிக்கை, தியானப் பயிற்சி, நம்பிக்கையானவர்களிடம் மனம் விட்டு பேசுதல் போன்றவற்றையும் மேற்கொண்டால், பிரச்னை நீங்கி தன்னம்பிக்கையுடன் சந்தோஷமும் அடையலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக பக்கத்து வீட்டுக்காரர்கள் உடல் நலமின்றி இருந்தால் ஓடிச்சென்று உதவலாம். தேவையானபொழுது சமைத்துக் கொடுத்து உற்சாகப் படுத்தலாம். இதனால் நோயுற்றவர்களுக்கும் ஓய்வு கிடைக்கும். நமக்கும் பிறருக்கு உதவிய சந்தோஷம் கிடைக்கும். இது போன்ற நன்றி உணர்வு, செயலாலோ, பொருளாலோ தேவைப்பட்டோருக்கு உதவுதல் ஆகியவை அளிக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது.
இப்பொழுது சொல்லுங்கள் 'நம் சந்தோஷம்
நம் கையில்தானே!