அழைப்பு மணி சத்தம் கேட்க... விரைந்து கதவைத் திறந்த பார்த்திபன், "டேய் கதிரேசா எப்படி இருக்கே? பார்த்து பல வருடங்கள் ஆச்சு. வா...வா..."
உள்ளே திரும்பி, "கண்ணம்மா, நம்ம கதிரேசன் வந்திருக்கான். அவனுக்கும் சேர்த்து காப்பி எடுத்துட்டு வா…"
"வாடா கதிரேசா. வீட்டில் எல்லோரும் நலமா? சுட்டிப் பேரன் எப்படி இருக்கான்?"
கேட்டவுடன்... கண்ணில் நீர் கசிய, அதை மறைத்த கதிரேசன் ஒன்றும் பேசாமல் இருக்கையில் சாய்ந்தான்.
"என்னடா ஆச்சு… சொல்லுடா? "
அதற்குள் வெளியே விளையாடிக்கிட்டு இருந்த குமரன், "தாத்தா.... வாயில்ல, மூக்குல புகை வர்ற பிஸ்கெட் வாங்கித்தா. "
"அது என்னடா பிஸ்கெட். அது பேரென்ன?"
"நைட்ரசன் பிஸ்கெட் தாத்தா. பக்கத்து வீட்டு கார்த்தி அதை வாயில் வைக்கிறான். உடனே வாயிலே, மூக்கில புகை வர்து. கேட்டா தரமாட்டேன்றான். பெரிசா பிகு பண்ணிக்கிறான்."
"சரி, இங்க பாரு... இந்தத் தாத்தாக்கு வணக்கம் சொல்லு. அவரு என் நண்பன். "
"ஹாய் தாத்தா... " சொல்லிட்டு உள்ளே போனான்.
உடனே, கதிரேசன் "டேய் அந்தப் பிஸ்கெட்டைச் சாப்பிட்டுத்தான் என் பெயரன் இறந்தான். புள்ள கேக்கறானே... நான் பாசமா வாங்கித் தந்த பிஸ்கெட், அவன் உயிரைக் காவு வாங்கிடுச்சிடா."
"என்னடா சொல்ற?"
"லிக்விட் நைட்ரசன் காற்றில ஆவியாகறதுடா. அதை நாக்கில வைச்சா புகை வரும். ஆனா, விழுங்கினா காத்தில்லனா திடமாய் மாறி தொண்டையில அடைச்சிடும். மூச்சுத்திணறி ஒரு செகண்டில இறந்துடுவாங்கடா."
"அதைத்தான் இப்போ உன் பெயரன் கேக்கிறான். அவன் கேட்டானேன்னு வாங்கித் தராதே. இந்தப் பிஸ்கெட்டையே தடை செய்யணும். இதனால் எத்தனை பேரு சாகப்போறாங்கன்னே தெரியலைடா... அந்தச் சோகத்தை மறக்கத்தான் நான் நகரத்தைவிட்டு, இந்தப் பூஞ்சோலை கிராமத்துக்கே வந்தேன். உன் பெயரனைப் பத்திரமா பார்த்துக்கோடா. எனக்கு மனசே சரியில்லை. இப்போ உன் பெயரனைக் காப்பாத்தின திருப்தியிலே கொஞ்சம் என் மனசு அமைதி ஆச்சு."
"நல்லவேளைடா... நீ சரியான நேரத்தில இதைப் பத்தி சொன்ன. எனக்கு இதெல்லாம் தெரியாதுடா. கடவுள் மாறி வந்தடா. நான் நாளைக்கே இதைப்பற்றி நோட்டீசு அடிச்சி, ஆங்காங்கே ஒட்டி வைக்கிறேன்... கொஞ்ச விழிப்புணர்ச்சி வந்தாப் போதும். யாரும் அந்தப் பிஸ்கெட் வாங்க மாட்டாங்க. அந்தப் பிஸ்கெட்டைத் தடை பண்ணச் சொல்லி அரசாங்கத்துக்கும் விண்ணப்பம் அனுப்பலாம்டா...."
நண்பனைக் கட்டியணைத்துக் கொண்டான் பார்த்திபன்.