Breast Re-Construction என்றால் என்ன? பிரபல ஹாலிவுட் நடிகை மார்பக மீள் கட்டமைப்பு செய்துகொண்டது ஏன்?
மார்பக புற்று நோய் வராமலேயே மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய நடிகை பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.
ஏன் அப்படி செய்தார்?
பரம்பரையில், தாய்க்கு மார்பக புற்று நோய் வந்திருந்தால், மகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் மரபணுக்கள் பிறழ்வு இருந்தது என்றால் மகளுக்கும் மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏஞ்சலினா ஜோலியின் அம்மாவுக்கு மார்பக புற்று நோய் வந்தது. ஏஞ்சலினா மரபணு சோதனைகள் செய்து கொண்டபோது அவருக்கும் மரபணு பிறழ்வு இருந்தது.
மார்பகப் புற்று நோய் வர அதிக வாய்ப்பு இருந்தது. அதனால் நோய் வரும் முன்பாகவே ஒரே சமயத்தில் இரண்டு மார்பகத்தையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டு. நவீன முறையில் மீள் கட்டமைப்பு (Re Construction) செய்து கொண்டார். அதற்குப் பின் இது பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டது..
Plastic & Cosmetic Surgeon, மற்றும் மார்பக Re Construction அறுவை சிகிச்சை நிபுணரான பேராசிரியர் மருத்துவர் வெங்கட் வி. ராமகிருஷ்ணன் வழங்கும் மார்பக மீள் கட்டமைப்பு (Breast Re Construction) குறித்த விளக்கம் இதோ:
பெண்கள் மார்பக மீள் கட்டமைப்பு செய்துகொள்ள முன் வருகிறார்களா?
இந்த மீள்கட்டமைப்பு செய்து கொள்வதற்கு மனதளவில் நிறைய தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கான கவுன்சிலிங் தருகிறோம். குடும்பத்தாரின் ஆதரவு வேண்டும். புற்று நோய் நீக்குவதுதான் முக்கிய நோக்கம். Re Construction என்பது அவரவர் விருப்பம்.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பினால் முற்றிலும் மார்பகம் அகற்றப்படும். Mastectomy செய்து கொள்ளும் சில பெண்கள், நாளடைவில், தனக்கு மார்பகம் இல்லாததை ஒரு குறையாக எண்ணுகிறார்கள்.
சில பெண்கள், தங்கள் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். இப்படித்தான் தன் தோற்றம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டிருப்பார்கள்.
மார்பகம் அகற்றப்பட்டுவிட்டது என்னும் Deformity நிலையில் அப்செட் ஆகிவிடுவார்கள்.அவர்கள் Re Construction செய்துகொள்ள விரும்புவார்கள். சில பெண்கள், மார்பகம் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு அப்படியே பழகிவிடுவார்கள்.
Re Construction எப்படி செய்யப்படுகிறது டாக்டர்?
இதுவும் ஓரு அறுவை சிகிச்சைதான். இதை நோயாளியின் சம்மதத்தோடு , மார்பக நீக்கம் செய்யும்போதே இந்த அறுவை சிகிச்சையையும் சேர்த்து செய்துவிடலாம்.
பாதிக்கப்பட்டவரின் அடிவயிற்றிலிருந்து கொழுப்பு (Fat) எடுத்து, அதை மார்பகம் இருந்த இடத்தில் தோலுக்குள் வைத்து , பிளாஸ்டிக் சர்ஜரியில் தேர்ந்த மருத்துவரால் மைக்ரோ சர்ஜரி செய்யப்படுகிறது.
ஜெல் இம்ப்லான்ட் செய்து மார்பகத்தை Reconstruct செய்வதும் மற்றோர் முறை. (ஏஞ்சலினா ஜோலி போல) இயற்கையாக இருந்தபடி இல்லாவிட்டாலும், ஓரளவு பழைய மார்பக அளவிலேயே அமைக்கப்படுகிறது.
இதனால் அந்தப் பெண்ணுக்கு தன் தோற்றம் குறித்த ஒரு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. ஏற்கனவே மார்பகத்தில் புற்று நோய் செல்கள் இருந்ததால் அது நீக்கப் பட்டிருக்கிறது.
Re Construction செய்வதால் மீண்டும் அங்கே நோய் வராதா?
அதற்காகத்தான் கொழுப்பு செல்களை எடுக்கிறோம். கொழுப்பு செல்களில் புற்று நோய் வராது. மார்பக திசுக்கள் வேறு மாதிரி வகையானவை. கேன்சர் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை
அப்படி Re Construction செய்த பெண்கள் குழந்தை பெற்றால் தாய்ப்பால் கொடுக்க முடியுமா? முலைக் காம்பும் நீக்கப்பட்டுவிடுமா?
ஆமாம். தவிர பால் சுரப்பதற்கான பிரத்யேகமான மார்பக திசுக்கள் இருக்காது.
மார்பக Re Construction க்கான விழிப்புணர்வு எவ்வாறு இருக்கிறது டாக்டர்?
குடும்பத்தினர் பெருமளவில் ஆதரிப்பதில்லை எனலாம். முகத்திலோ, கைகளிலோ ஏதாவது குறைபாடு வந்தால் அதை காஸ்மடிக் சர்ஜரி செய்ய சம்மதிக்கும் குடும்பத்தினர், இதற்கு யோசிப்பார்கள். இது உடையால் மூடிய உறுப்புதானே என்று நினைக்கிறார்கள்.
சிகிச்சைக்கு எத்தனை நாளாகும் ?
நான்கு நாட்கள் மருத்துவரின் கண்காணிப்பில் மருத்துவ மனையிலேயே இருக்கவேண்டும். இடம் மாறிய கொழுப்பு செல்களுக்கு சரியானபடி ரத்த ஓட்டம் செல்கிறதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.
அதன் பின்னரும் இரண்டு வாரங்களுக்கு தோள் அசைவுகள் கட்டுப்படுத்த வேண்டும். நார்மல் வர ஒரு மாதம் வரை ஆகும்.
முலைக்காம்புகளை Re Construct செய்ய முடியுமா?
உடனே செய்ய முடியாவிட்டாலும் அதற்கான தனி வழிமுறைகள், சிகிச்சைகள் உள்ளன.
மார்பக நீக்கம் அறுவை சிகிச்சையால் அந்தப் பெண்ணின் மனநிலை பாதிக்கப்படுமா டாக்டர்?
சிலருக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படலாம். ஆனால், அனேகமாக பல பெண்கள் இதைக் கடந்து சாதித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகிறார்கள்.

