Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

இரக்கம் என்பது நீ உனக்காகச் சேர்த்துவைக்கும் சொத்து! எப்படி?

Published on

- சுடர்லெட்சுமி மாரியப்பன்

ந்த ஒரு நபருடைய வாழ்வும் இரக்கம் இன்றி கடந்துவிட முடியாது. இன்று நாம் ஒருவர் மீது காட்டும் இரக்கம், கருணை, அன்பு போன்ற அனைத்தும் நாம் நமக்காகச் சேர்த்து வைக்கும் இரக்கம், கருணை, அன்பு என்றுதான் கூறவேண்டும். ஆம்! இதை நான் ஒரு சிறு கதையாக விளக்குகிறேன் மேலும் படியுங்கள்...

தனது கல்லூரிப் படிப்பை முடித்து வேலைத் தேடி வெளி ஊர் சென்ற அருண், வேலைக்கான நேர்முகத் தேர்வினை முடித்துவிட்டு கையில் காசு ஏதும் இல்லாமல் தனது விடுதியை நோக்கி நடந்துக்கொண்டிருந்தான். அப்போது கடும் பசியில் உச்சி வெயில் சுட்டெரிக்க ஒரு தெருவைக் கடந்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் மனமும் உடலும் அதிக சோர்வுற்று அவனை அடுத்த அடி எடுத்து வைக்காமல் செய்தது.

அப்போது திடீரென்று எங்கோ இருந்து வந்த மோர் விற்கும் அம்மா ஒருவர் இவன் நிலையைக் கண்டு, மெதுவாக அவனை நிழலுக்கு அழைத்துச் சென்று, தான் கொண்டுவந்த மோரை ஒரு தம்ளரில் ஊற்றிக் கொடுத்தார். தன்னிடம் காசு இல்லாததால் வேண்டாம் என்று இவன் கூற, அந்த மோர் விற்கும் பெண்மணியோ "பசியில் இருபவனிடம் பணம் வாங்க மாட்டேன். முதலில் இந்த மோரைப் பருகு" என்றார். குடிக்கத் தண்ணீர் இன்றி மயக்க நிலையில் சென்ற  அருணை அந்த ஒரு கோப்பை மோர் தெளிவாக்கியது.

சில நாட்களுக்குப் பின், அருண் தன் பணியை முடித்துவிட்டு விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது அதே மோர் விற்கும் அம்மாவை பேருந்து நிலையத்தில் பார்த்தான். ஆனால், இந்த முறை அந்த அம்மா கண்கலங்க  ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். கையில் இருந்த மோர் பெட்டியில் மோர் கொட்டி இருப்பதை இவன் கவனித்துவிட்டு அருகில் சென்று அந்த அம்மாவிடம் பேசியபோது அவர்கள் கண்டுகொள்ளாமல் ஏதோ சிந்தையிலே உட்கார்ந்திருந்தார். பின் அவர்களை மீண்டும் அழைத்து அன்று நடந்த நிகழ்வுகளைக் கூறி தன்னை அவருக்கு நினைவுபடுத்தினான் அருண்.

இதையும் படியுங்கள்:
வெஜிடபிள் சூப் மற்றும் மிளகு பூண்டு சூப் செய்யலாம் வாங்க!
Motivation Image

அந்த அம்மாவிடம் சிறிது நேரம் பேசியபின், அந்த அம்மா கை தவறி மோர் அனைத்தையும் கொட்டிவிட்டு, தனது கணவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல பணமில்லாமல் கண்ணீருடன் யோசித்துக் கொண்டிருப்பது இவனுக்கு தெரியவந்தது. அந்த அம்மாவின் கணவருக்கான மருத்துவச் செலவை அருண் அந்த அம்மாவிடம் கொடுக்க அதை அவர் வாங்க மறுத்தார்.

உடனே அருண், "அம்மா பசியில் இருப்பவனிடம் நீங்கள் பணம் வாங்க மாட்டீர்கள். அதேபோல் என்னுடைய பசியைப் போக்கிய என் அம்மாவை நான் கலங்கவிட மாட்டேன்" என்று கூற, கண்ணீர் உடன் அந்த அம்மாவின் முகத்தில் புன்னகையைப் பார்த்தான் அருண்.

இதுபோன்ற நிகழ்வுகளில்தான் கடவுளை மனித உருவத்தில் பார்க்க முடிகிறது. நாம் பிறர் மேல் காட்டும் இரக்கம், நாம் நமக்காக சேர்த்து வைக்கும் இரக்கம், கருணை, அன்பு... எப்படி என்பது புரிந்ததா அன்பர்களே!

logo
Kalki Online
kalkionline.com