
உலகின் மிகப்பெரிய காப்பியங்களில் முதன்மையானது இராமாயணம் ஆகும். ராமாயணம் ஒரு முறை மட்டும் எழுதப்பட்ட காப்பியம் அல்ல, இது பலமுறை பலரால் பல மொழிகளில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட மிகப்பெரிய வெற்றி அடைந்த இலக்கியமாகும். ராமாயணம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணத்தை முதன்மையான நூலாக வைத்திருக்கின்றனர். அந்த நாடுகளில் வேறு வேறு சமயங்கள் பின்பற்றப்பட்டு வந்தாலும் ராமாயணத்தின் மகிமையை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
பொதுவாக நாம் அனைவருமே ராமாயணத்தை பற்றி அறிந்திருப்போம். ராமாயணம் என்பது தீமையின் முழு வடிவம் ஆகிய ராவணன் என்னும் அரக்கனை அழிக்கும் ஒரு உன்னதமான மனிதனின் கதை. ராமாயணத்தில் ராமர் சீதை மற்றும் ராமரின் சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்துருகனன் ஆகியோரை பற்றியும் நம்மால் அறிய முடிகிறது. ஸ்ரீ ராமனின் ஒவ்வொரு சகோதரர்களும் தனது மற்ற சகோதரர்களின் மீது மாசற்ற அன்பை வைத்திருந்தனர். உலகிலேயே மிகச் சிறந்த சகோதரர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவர்கள் ராமரின் சகோதரர்கள்.
இன்றும் கூட அண்ணன் தம்பிகளுக்கு ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருகணன் என்று பெயர் சூட்டுவது மரபாக உள்ளது. இவர்கள் எதற்காக இந்த பெயரை சூட்டுகின்றனர் என்றால், ராமரின் சகோதரர்களைப் போலவே தங்களது மகன்களும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான். ராமரின் சகோதரர்களை பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் பெரும்பாலோனோர் அறியாத ராமரின் சகோதரியை பற்றி அறிந்துக் கொள்வோம்.
ஸ்ரீ ராமருக்கு சாந்தா என்ற ஒரு மூத்த சகோதரி இருந்தாள் என்பது பலருக்கும் தெரியாது. தசரதனுக்கும் கௌசல்யாவிற்கும் பிறந்த முதல் குழந்தை தான் சாந்தா தேவி. ஒரு முறை, அங்கதேச மன்னர் ரோமபதன் தனது மனைவி ராணி வர்ஷ்னியுடன் அயோத்திக்கு வந்தார்.
ரோமபதனுக்கும் வர்ஷ்னினிக்கும் குழந்தைகள் இல்லாததால் எப்போதும் விரக்தியுடன் இருந்தனர். புத்திர பாக்கியமின்மையால் கவலைக் கொண்ட அவர்களை பார்த்து மனமிரங்கிய தசரதன், தன் மகள் சாந்தாவை அவர்களுக்கு தத்து கொடுத்து விட்டார்.
தங்களுக்கு மகள் கிடைத்த மகிழ்ச்சியில் ரோமபத மன்னர் இருந்தார். ஒரு நாள் மன்னரிடம் உதவி கேட்டு ஒரு பிராமணர் வந்திருந்தார்; அந்த நேரத்தில் மன்னர் அதை கவனிக்காமல் சாந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனால் வெறுப்புற்ற பிராமணர், மன்னன் மீதுள்ள கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் தனது பக்தனான பிராமணன் வேதனைப்பட்டதைக் கண்டு, அங்க தேசத்தில் மழை பொழிய விடாமல் செய்தார். அதனால் நாடு பஞ்சத்தில் பாதிக்கப்பட்டது. இதைக் கண்ட மன்னர் தீர்வு காண விரும்பினார்.
ரோமபத மன்னர், முனிவர் ரிஷ்யஷ்ருங்கரை கண்டு பஞ்சத்தை போக்க வழி செய்யுமாறு கேட்டார். முனிவரும் இந்திரனை மகிழ்விக்க யாகம் செய்தார். மனம் குளிர்ந்த இந்திரன் நல்ல மழையை பொழிய வைத்தான். அங்க தேசம் முழுக்க நீர் நிரம்பி பயிர்கள் செழித்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் சாந்தாவை ரிஷ்யஷ்ருங்க முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.
ரிஷ்யஷ்ருங்க முனிவர் தான் தசரத மன்னருக்கு புத்ரகாமேஷ்டி யாகம் செய்து தந்தவர். இதன் பின்னர் ராமரும் அவரது சகோதரர்களும் பிறந்தனர். அயோத்தியிலிருந்து 40 கிமீ தொலைவில் ரிஷ்யசிருங்க முனிவரின் ஆசிரமம் இன்றும் உள்ளது. அங்கே சாந்தா தேவியின் நினைவிடமும் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள் அவரை வழிபட்டு செல்கின்றனர்.