

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற இந்த வசனத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்... இந்த பழமொழியின் அர்த்தம் என்ன (Tamil Proverb Meaning) என்று பார்க்கலாமா....
முதலாவது அர்த்தம்:
மாணவர்கள் வெறும் புத்தகத்தை மட்டுமே படித்தால் ஒரு பயனும் கிடைக்காது. இந்தப் பழமொழியில் ஏட்டு என்பது புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை குறிக்கிறது. ஒரு சில மாணவர்கள் புத்தகத்தை மட்டும் விழுந்து விழுந்து படிப்பார்கள். பரீட்சையில் அதை அப்படியே கக்கிவிட்டு வருவார்கள். வெறும் புத்தகத்தை மனப்பாடம் செய்து படித்தால் மட்டும் போதாது. புத்தகத்தை மட்டுமே படித்தால் உங்களுடைய அறிவும் திறனும் வளராது. திறமைகளை மேம்படுத்த புத்தகத்தைத் தவிர மாணவர்களுக்கு பிராக்டிகல் முறையும் மிக மிக அவசியம். படிப்பைத் தவிர ஏதாவது ஒரு கைத்தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு வேளை வாழ்க்கையை ஓட்ட முடியும்.
புத்தகத்தைத் தவிர பொது அறிவையும் சுயமாக செய்யும் அளவில் ஒரு தொழிலையும் வளர்த்து கொள்வது மிக மிக அவசியம். அதுவும் தற்போதைய சூழ்நிலையில் கண்டிப்பாக புத்தகத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. “கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், இனி கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்ற வரிகளை நாம் எல்லோருமே கேட்டிருப்போம்..
இந்தப் பழமொழியிலும் அதைத்தான் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள் அதாவது ஒரு காகிதத்தில் வெறும் சுரைக்காய் என்று எழுதி அந்த சுரைக்காயை வைத்து சமையல் செய்ய முடியுமா?? சுரைக்காயை வைத்து சமையல் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு அனுபவ பூர்வமாக சுரைக்காயை வாங்கி வந்து அதை நறுக்கி பிறகு தானே சமைக்க முடியும்... அதைத்தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது...
இரண்டாவது அர்த்தம்:
எட்டிக் காஞ்சிரங்காய் என்ற காய் தான் காலபோக்கில் ஏட்டுச் சுரைக்காய் என தவறுதலாகப் பயனில் இருக்கிறதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. நாம் எல்லோரும் பொதுவாகவே, பழமொழிகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறாகவே தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு வருகிறோம். அந்த வகையில் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்கிற பழமொழியும் அடங்கும்.
எட்டிச் சுரைக்காய் என்றால் கசப்பான சுரைக்காய்.
காஞ்சிரை அல்லது காஞ்சிரங்காய் - என்ற பெயர் கொண்ட காயை மக்கள் பெரும்பாலும் எட்டிக்காய் என்றே அழைத்தனர்.
அதாவது எட்டி என்றால் பயங்கர கசப்பு. எட்டிக் காஞ்சிரங்காயின் அதிகமான கசப்பான சுவை காரணமாக அதை சமையலுக்கு உபயோகப்படுத்துவதில்லை. ஆகவே, கசப்பு தன்மை காரணமாக எட்டிக் காய் என்கிற காஞ்சிரன்காயை கறியாக சமைக்க முடியாது என்பதே இந்த பழமொழியின் பொருளாகவும் கருதப் படுகிறது.