சென்னையில் நடந்த உடல்நலத் திருவிழா!
மதராஸ் டெம்பிள் சிட்டி ரோட்டரி நடத்திய உடல்நலத் திருவிழா (Healthy You Happy You), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில் மார்ச் 17, 2024 அன்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தத் திருவிழா நடைபெற்றது. இந்த உடல்நலத் திருவிழா முதல்முறையாக ரோட்டரி சங்கத்தினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இது இனி வருடந்தோறும் தொடரவுள்ளது என மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த உடல்நலத் திருவிழாவில் பல்வேறு விற்பனையரங்குகள் இருந்தன. சிறுதானிய வகைகளைக் கொண்டு உருவாக்கப்படும் மில்ஜியோ(miljio) ஐஸ்கிரீம் சுவையோ சுவை! கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, சாமை, தினை போன்றவற்றை ஊறவைத்து, அரைத்து, பால், சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து அருமையாக தயாரிக்கப்படுகின்றன. பலாப்பழம், சப்போட்டா, நாட்டு வெல்லம் போன்ற வித்தியாசமான வகைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்ன.
பாரம்பரிய நெல்வகைகளைச் சார்ந்த அரிசிகள் செம்புலம் (Sempulam) என்ற நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டன. இந்த அரிசி வகைகள் பல்வேறு ஊட்டச் சத்துக்களையும், மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளன. இவை இப்போது, பெரிய அளவில் சாகுபடி செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. செம்புலம் நிறுவனத்தின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது.
ஜிஆர்பி (GRB), பாரி (PARRY), மன்னா(MANNA), கவின் கேர்(CAVIN KARE) போன்ற நிறுவனங்களின் விற்பனையரங்குகளில் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் விற்பனைக்கு இருந்தன.
ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமி கண் மருத்துவமனையின் சார்பாக இலவச கண்சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவிரி மருத்துவமனையின் பிரத்யேக விழிப்புணர்வு மையமும் இருந்தது.
அறிதிறன் குறைபாடு குழந்தைகளுக்குக் கைத்தொழில் பயிற்சி அளித்து, அவர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவு வகைகள், கைவேலைப் பொருட்கள், சோப்புகள் போன்றவற்றை விற்கும் சங்கல்ப்(Sankalp) தொண்டு நிறுவனத்தின் விற்பனையகம் இருந்தது.
பெண்கள் உடைகள் விற்பனையகங்களும் இருந்தன. உடல் நலம் மட்டுமன்றி, பொருளாதார நலம், சாலையில் வாகனங்கள் செலுத்துவதில் பாதுகாப்பு நலம் என்று கூட, சில விற்பனையகங்கள் இருந்தது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
தளிகை உணவகத்தின் விற்பனையகம் ஹைலைட்!
மருத்துவர்கள் மற்றும் ஆரோக்கிய நிபுணர்களால் பல்வேறு சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. சிரிப்பு யோகம், ஆரோக்கியமான உணவு, கண்களின் ஆரோக்கியத்தினைப் பேணுவது, மனநலத்திற்கு ஜென் தியானம், விளையாட்டின் மூலம் உடல் மற்றும் மனத்தின் நலனைப் பேணுவது, மூத்தக் குடிமக்கள் கீழே விழாமல் தங்களைக் காத்துக் கொள்வதன் அவசியம், தூக்கத்தின் முக்கியத்துவம், சித்தர் வாழ்க்கை முறை, ஜூம்பா நடனம் என பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
சிறுதானியங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் போட்டியும் நடைபெற்றது. ராகி அல்வா, சிறுதானிய பிரியாணி, சத்துமாவு கொழுக்கட்டை, ராகிமாவு தோசை, சிறுதானிய பக்கோடா, சிறுதானிய லட்டு, சிறுதானிய அடை என பல்வேறு சிறுதானியங்களைக் கொண்ட உணவுவகைகள் போட்டியில் கலந்து கொண்டவர்களால் தயாரிக்கப்பட்டு, சிறந்த முயற்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மொத்தத்தில், ரோட்டரி சங்கம் நடத்திய உடல்நலத் திருவிழா, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாரம்பரிய உணவுக்களைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நலம் பேணும் நல்லதொரு நாளாக அமைந்தது!
இந்தத் திருவிழா வருடாவருடம் இன்னும் சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்.