வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இது நம் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவும். இதிலும் இப்பொழுது கலப்படம் நடக்கிறது என்பது வேதனைக்குரிய, கவலைக்குரிய விஷயம்.
சிலர் தர்பூசணியின் உள்புறம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கையாக ரசாயனங்கள் சேர்க்கிறார்கள். சில ரசாயனங்களை பயன்படுத்தி பழங்களில் அதிக சிவப்பு நிறத்தை கொண்டு வருகின்றார்கள். இதனை வாங்கி சாப்பிடும் போது உடல் நலம் பாதிப்படைகிறது.
பழுக்காத தர்பூசணியை விரைவில் பழுக்க வைக்க ஆக்சிடாசின் ரசாயனத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த ரசாயனத்தால் வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சீக்கிரம் பழுப்பதற்காக கால்சியம் கார்பைடையும் பயன்படுத்துகிறார்கள். இதை சாப்பிடுவதால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு ஏற்படும்.
சிவப்பு நிற ரசாயனத்தை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் தர்பூசணிக்குள் செலுத்தி விடுவதால் பார்ப்பதற்கு நல்ல கலரில் இருப்பதுடன் பழுத்ததாக நினைத்து மக்களும் வாங்கி விடுகிறார்கள்.
இதனால் சிலருக்கு வயிறு உப்புசம், வாந்தி, மூச்சிரைப்பு, டயரியா, கண் பார்வையில் கோளாறு போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.
சரி . செயற்கையாக பழுக்க வைத்த தர்பூசணியை அடையாளம் காண்பது எப்படி?
வெளிப்புறத்தை பார்க்கும் போது பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. உற்று நோக்கினால் ஊசி போட்டதற்கான அடையாளம் தெரியும். சில நேரங்களில் எலி பிராண்டியது போன்ற அடையாளம் கூட காணப்படும்.
அப்போதும் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பழத்தை வெட்டியதும் ஒரு காட்டன் வெள்ளை துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் துடைக்க அந்த காகிதத்தில் அல்லது துணியில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறம் இறங்கி இருக்கும். இதைக் கொண்டு இது செயற்கையாக வண்ணம் சேர்க்கப்பட்டது என அறியலாம்.
ரசாயனத்தால் பழுக்க வைத்த தர்பூசணியின் சுவை இனிப்பாக இல்லாமல் சலசலவென இருக்கும். பார்ப்பதற்கு நல்ல சிவப்பான நிறத்தில் இருந்தாலும் இனிப்பு சுவை இருக்காது.
பழங்களின் ஓரங்களில் உள்ள வெள்ளை பகுதிகள் வெள்ளை நிறமாக இல்லாமல் சிவப்பு கலந்து காணப்படும்.
தர்பூசணி துண்டு ஒன்றை எடுத்து தண்ணீரில் போட்டு வைக்க தண்ணீரின் நிறம் மாறும்.
ரசாயனம் கலந்த இந்த பழங்கள் சீக்கிரம் அழுக ஆரம்பித்து விடும்.
வியாபார லாபத்திற்காக இப்படி கலப்படம் செய்து மக்களின் உயிருடன் விளையாடுவது மிகவும் தவறான செயல். இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு நிச்சயம் வேண்டும். அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பதிவு.