
திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளிலும் பண்டிகைகள் பூஜைகளிலும் தாம்பூலம் எனும் வெற்றிலையின் பங்கு மகத்தானது. கல்யாண நிச்சய நிகழ்ச்சிக்கு நிச்சய தாம்பூலம் என்றே பெயர். சுப நிகழ்ச்சிகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது, வீட்டுக்கு வருகை தரும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்குடன், மஞ்சள், குங்குமம் தருவது என்பது நம் கலாச்சாரம்.
வெற்றிலைக்கு உள்ள மருத்துவ குணங்களை பார்ப்போம்.
வெற்றிலையுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு கலந்து குடித்தால், சளி பிடிக்காது. ஏற்கனவே சளி இருந்தாலும் குணமாகிவிடும்.
வெற்றிலையை கழுவி துடைத்து, அனலில் வாட்டி, கசக்கி பிழிந்து, சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன், மிளகுத்தூள், சுக்கு பொடி கலந்து குடித்தால், சளி, இருமல் கட்டுப்படும். கபம் கரையும்.
ஒரு வெற்றிலையுடன் சிறு துண்டு சுக்கு சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டால் தலைவலி தீரும்.
வெற்றிலை காம்பு, பூண்டு, திப்பிலி, வசம்பு சம அளவு எடுத்து அரைத்து, தேனுடன் கலந்து சளித்தொல்லை உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி கரைந்து வந்துவிடும்.
பூரான், கம்பளிப்பூச்சி கடித்தால், ஒரு வெற்றிலையில் சிறிது மிளகை வைத்து மென்று தின்றால், தடிப்பு மறைந்து, வலி குறையும். விஷமும் பரவாது.
முள் குத்தினால் முள்ளை எடுத்த பிறகும் வலி இருந்தால், இரண்டு வெற்றிலையை நெருப்பில் வாட்டி, ஒத்தடம் கொடுத்தால்போதும். வலி குறைந்து, இதமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால், வெற்றிலையை தணலில் வாட்டி, கை பொறுக்கும் சூட்டில் வயிற்றின் மேல் வைத்து எடுத்தால், வலி குறையும்.
வெற்றிலையை அரைத்து, சாறு பிழிந்து, ரசம் செய்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், சளி, இருமல் பிரச்னை தீரும். சுவையாகவும் இருக்கும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவோடு மென்று தின்றால், காரம், துவர்ப்பு சுவையுடன் உண்ட உணவும் ஜீரணம் ஆகும். விருந்து சாப்பாட்டிற்குப் பிறகு வெற்றிலை போடுவது இதனால்தான்.
வெற்றிலை, பாக்கு லிப்ஸ்டிக் பூசாமலேயே உதடுகளுக்கு சிறந்த நிறம் தரும்.