காந்திக்கும் அம்பேத்கருக்கும் குரு! இந்தியாவின் 'அந்த' உயரிய சீர்திருத்தவாதி யார்?

ஜோதிராவ் கோவிந்தராவ் பூலேவின் கல்வி-சமத்துவத் தத்துவங்கள் இன்றும் இந்தியாவின் சமூக நீதி இயக்கங்களுக்கு ஆதார சுருதியாக உள்ளன.
Jyotirao Phule
Jyotirao Phuleimage credit-Wikipedia
Published on
mangayar malar strip
mangayar malar strip

'19ம் நூற்றாண்டு இந்தியா'வின் மிக முக்கியமான சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே. இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் சமத்துவப் போராளியும் கூட. சாதி அமைப்பு, தீண்டாமை, மற்றும் பெண் கல்வி இன்மை ஆகியவற்றை கடுமையாக விமர்சித்த இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றினார். மகாத்மா காந்திக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் முன்னோடியாக, குருவாக விளங்கினார்.

கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டுப் பணிகள்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்த ஜோதிராவ், பூக்கள் விற்பனை செய்யும் மாலி (தோட்டக்காரர்) சமூகத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் திறமையான மாணவராக இருந்தாலும், இவரது சமூகத்தினருக்கு உயர்கல்வி என்பது கனவாகவே இருந்தது. தனது சொந்த அனுபவத்தின் வாயிலாகவே கல்வி மற்றும் சமூக சமத்துவத்தின் மதிப்பை ஆழமாக உணர்ந்தார். பெண்கள் மற்றும் தலித் மக்களின் கல்வி முன்னேற்றமே சமூக மாற்றத்தின் திறவுகோல் என்று ஆணித்தரமாக நம்பினார்.

1848இல், தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்களுக்காக புனேவில் முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தது இவரது புரட்சிகர நடவடிக்கைகளின் தொடக்கம். அக்கால இந்தியாவில் பெண் கல்வி என்பது மிகவும் அரிதானது மற்றும் சமூக எதிர்ப்புக்குரியது. தனது மனைவியான சாவித்திரிபாய் பூலேவுடன் இணைந்து (இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்) இதைத் துணிவுடன் நடத்தினார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவிய ஆசிரியை!
Jyotirao Phule

இந்த உன்னத தம்பதியினர் தங்கள் வாழ்நாளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கினர். பள்ளிகள் மீதும், இவர்களது சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மீதும் கடும் எதிர்ப்பு நிலவியபோதிலும், இவர்கள் தங்கள் பணியில் சற்றும் மனம் தளரவில்லை.

முற்போக்கு நடவடிக்கைகள்

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததுடன், விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தார். 1863இல் கர்ப்பிணி விதவைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இல்லங்களை அமைத்தார். இது ஒரு முற்போக்கான, மனிதாபிமான நடவடிக்கை. இவரது பணிகள் இந்திய சமூகத்தில் பெண்கள் கல்வி பெறுவதற்கும், அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அதிகாரமளிக்கவும் உதவின.

சத்திய சோதக சமாஜ் மற்றும் சமூகப் போராட்டங்கள்

1873இல் சத்திய சோதக் சமாஜை (உண்மைத் தேடுபவர்கள் சங்கம்) நிறுவினார். இந்த அமைப்பின் நோக்கம், பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார ஏற்றத்தை அடைவதும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதும் ஆகும். இதன் உறுப்பினர்கள் மூடநம்பிக்கை மற்றும் சடங்குகளை எதிர்த்தனர்.

தீண்டாமையை அடிமைத்தனத்துடன் ஒப்பிட்ட அவர், "கல்வியின்மை அனைத்து துயரங்களின் மூலம்" என்று வாதிட்டார். இவரது போராட்டம் மதம் சார்ந்த ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி, சுயமரியாதை மற்றும் மனித சமத்துவத்தை நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.

இலக்கியப் பங்களிப்புகள்

ஜோதிராவ் பல புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், மற்றும் நாடகங்கள் எழுதினார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், சாதி அமைப்பின் அநீதிகளையும் தோலுரித்துக் காட்டின. இவரது மிக முக்கியமான படைப்பு, 'குலாமகிரி' (அடிமைத்தனம்). இது அடிமைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், சாதி அடக்குமுறையின் கொடூரங்களையும் வெளிப்படுத்தும் ஒரு புரட்சிகரமான ஆவணம். 'உழவனின் சாட்டை' மற்றொரு குறிப்பிடத்தக்கப் படைப்பு.

பின்னோடி தாக்கம்

பூலேவின் புரட்சிகரக் கருத்துக்கள் இந்திய சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. இவரது தொலைநோக்குப் பார்வை மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாகு மஹராஜ், மற்றும் தந்தை பெரியார் போன்றோரை ஈர்த்தன.

இதையும் படியுங்கள்:
அண்ணல் அம்பேத்கர் நமக்காகவும், இந்திய நாட்டிற்காகவும் என்ன செய்தார் தெரியுமா?
Jyotirao Phule

காந்தி, தீண்டாமையை இந்து மதத்தின் கறை என்றும், கடவுளுக்கு எதிரான குற்றம் என்றும் கருதுவதற்கு பூலேவின் சிந்தனைகள் தூண்டுகோலாக அமைந்தன. டாக்டர் அம்பேத்கர் இவரைத் தனது தொலைநோக்கு குருவாகப் போற்றினார். அம்பேத்கர் தனது சாதி விமர்சனத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் சேர்த்து, சமூக நீதிக்கு அடித்தளமிட்டார். பூலேவின் கல்வி-சமத்துவத் தத்துவங்கள் இன்றும் இந்தியாவின் சமூக நீதி இயக்கங்களுக்கு ஆதார சுருதியாக உள்ளன. அவரது பணிகள் இந்தியாவின் சமூக மாற்றத்திற்கு என்றும் உத்வேகமளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com