
மழையே மழையே
வர்ண ஜபம் செய்தால்தான்
வருவாய் முன்பெல்லாம்
தெருவெங்கும் நிறைந்து
நீரோட வைக்கிறாய் இப்போது
பயிர்கள் மூழ்கி பாழாகாமல்
பார்த்துப் பெய்திடு
வாடி வதங்கி விடாமல்
வளர்ந்து வாழ உதவிடு
மழையே மழையே..
படகும் மழையும்
காகிதப் படகு விட்டோம்
மழை நாளில் முன்பு
நிஜ படகு ஓட்டுகிறோம்
மழை நீரில் இன்று..
படகுக்கும் மழைக்கும்
பந்தம் உண்டு போலும்..
- எஸ். ராஜம் திருச்சி
****************************
இறுமாப்பு
சிற்றெறும்பு ஒன்று
மடியில் இளைப்பாற
கோவர்த்தனகிரியாய்
தன்னை நினைத்து
இறுமாப்பில்விரிந்தது
நேற்று பெய்த மழையில்
முளைத்த நாய்க்குடை..
- என்.கோமதி, நெல்லை
****************************
மழைத்துளி உயிர்த்துளி
விண்ணின்று வீழும் மழைத்துளி,
என்றைக்கும் எப்போதும் உயிர்த்துளி!
தண்ணீருக்கு ஆதாரம் வான் மழையே!
எண்ணி நாம் சேகரித்தால் இல்லை குறையே!!
மழையில் நனைதல் மழலைக்கு விருப்பம்!
மழையில் ஆடிப்பாடுதல் மங்கைக்கு சொர்க்கம்!!
வெள்ளமாய் வந்து வாட்டி எடுக்கும்!
இல்லை என்றாகி ஏங்க வைக்கும்!!
மிகுதியாய் பெய்தாலோ பெரும் சேதம்!
மிகவும் குறைந்தாலோ ஏற்படும் சோகம்!!
அளவோடு பெய்து வளமாக்கி வைத்தால்,
நலமாக நாம் இருப்போம்,
நன்றி மறவோம் மழையே!
- பி. லலிதா, திருச்சி.
****************************
தாய்ப்பால் துளி
வருணன் சேமித்து வைத்த கவிதைத் துளி
வளைந்து நழுவி பூமிக்கு வந்த மழைத்துளி
ஆகாயம் அள்ளித்தெளிக்கும் பன்னீர்த்துளி
கடவுள் தாயாகி தந்தருளும் தாய்ப்பால் துளி
கார்மேகம் அழுதால்
மழையாகக் கொட்டும்
மழைத்துளி பட்டு மண்ணும் மணம் வீசும்
பிளவுண்ட நிலத்தில் உயிர்த்துளி பாயும்
துயில் கொண்ட விதைகள் துளிர்த்து எழும்
பயிர்கள் விளைந்து பட்டினி தீரும்
விவசாயி வீட்டில் அடுப்பு அணையாமல் எரியும்.
நீர் நிலைகள் யாவும் நிரம்பி வழியும்
நீர் பஞ்சம் வெகுதூரம் விலகி ஓடும்
காடுகள் செழித்து அடர்த்தியாக வளரும்
கவலைகள் யாவும் நீரில் கரைந்தே போகும்.
காதுகளில் கொசுக்கள் ரீங்காரம் செய்யும்
தவளைகள் பலமாகத் தாளம் போடும்
மழைகொட்டும் சத்தம் இசையாக ஒலிக்கும்
மெளனமாக போர்வைக்குள் முடங்கிவிடத் தோன்றும்.
- ஹேமலதா சீனிவாசன், சென்னை
****************************
மழை நினைவுகள்
மழை முடிந்த பின்னும்
மரக்கிளையில்
உதிரும்
மழைத்துளிகளாய்
என்னுள்
துளிர்க்கிறது
பால்யத்தின்
மழை நினைவுகள்.
*******
மழையை சுவைத்த
அருவியை
மனதில்
ருசிக்கிறேன்
சித்திரமாய்
*******
சில்லென்ற மழை
சிலிர்க்கும் தேகம்
துளிர்க்கும் குளிரில்
குதூகலிக்கும்மனசு
போர்வை தேடும் இரவுகள்
மனதுக்குள் பேசும்
பழைய நினைவுகளில்
நனைய காத்திருக்கிறேன்
ஒரு மழை நாளுக்காய்.
- மகாலட்சுமி சுப்பிரமணியன் , காரைக்கால்.
****************************
வானவில்
பளிச் மின்னலாய் முறைப்பு
இடி முழக்கமாய் கோபம்
இறுதியில் வானமகள் அடைமழையாய் அழுதழுது
வாங்கியே விட்டாள்
வண்ணச்சேலை....
வானவில்.
- செண்பக பாண்டியன், சத்துவாச்சாரி.