வில்வம் பழத்தின் மருத்துவ குணங்கள்

வில்வம் பழத்தின் மருத்துவ குணங்கள்
Published on

குடல் பாதுகாப்பு

குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.

மலச்சிக்கலைப் போக்கும்

சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.

சளி தொல்லை

சிலருக்கு சளி தொல்லை அடிக்கடி இருக்கும். அவ்வாறு உள்ளவர்கள் வில்வ பழத்தினை ஜூஸ் தயாரித்து காலை மற்றும் மாலை எடுத்துக்கொண்டால் சளி தொல்லை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதயத்தை பாதுகாக்கும்

இதயத்தை பாதுகாக்கும் உணவுகளில் வில்வப் பழமும் ஒன்று. வில்வ பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக பாது காக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால் நீண்ட நாள்கள் வாழ முடியும்.

வயிற்றுப் பிரச்சனை

சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்தி வந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.

ஆஸ்துமா குணமாகும்

வில்வ பழத்தினை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா நோய் குணமாகும். வில்வ பழத்துடன் வில்வ இலை சேர்த்து அதனுடன் சுடுதண்ணீர், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் குணமாவதோடு இருமல், ஜலதோஷம் பிரச்சனைகள் இருந்தாலும் உடனடியாக தீர்க்கும்.

கல்லீரலை பாதுகாக்கும்

கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் அல்லது மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கல்லீரல் பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயினை போக்கும்.

வயிற்றுப்புண் குணமாகும்

வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள், வில்வ இலைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் குடலிலுள்ள புண்கள் குணமாகும். இந்த இலையில் உள்ள டானின் எனும் துவர்ப்பு சக்தியே ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டுள்ள புண், வலி போன்றவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது.

வில்வ கனி சர்பத் மற்றும் வில்வ இலை தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை படிப்படியாக குறைத்துவிட்டு ஆரோக்கியத்தை தரும். வில்வ பழம் மட்டுமல்ல வில்வமரத்தின் பூ, காய், வேர், பிசின், பட்டை, ஓடு போன்றவைகள் மருந்தாக பயன்படுகின்றன. சித்த மருத்துவரின் உதவியோடு இதனை தேவையானவர்கள் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com