இட்லித் துணியில்
ஒட்டிக் கொண்டிருந்த
மாவுத் திட்டுகளைக் கழுவி
கொடியில் காய வைத்து வந்து
கண்ணாடியில்
முகம் பார்த்துக் கொள்கிறாள்
கை கால் முகம் அலம்பியதும்
கண்ணாடியில்
முகம் பார்த்து
பொட்டு வைத்துக் கொள்கிறாள்
உணவு முடிந்து
தட்டுக் கழுவி
கழுவிய தட்டில் ஒரு தரம்
முகம் பார்த்துக் கொள்கிறாள்
போடப்படாத டீ.வியின்
கறுத்தத் திரையில்
முகம் பார்த்து விட்டு
ஏதோ காட்சிகளைப்
பார்க்கத் தொடங்குகிறாள்
பள்ளி விட்டு வந்த
மகளைக் குளிப்பாட்டி
அவளோடு ஒருமுறை
கண்ணாடியில்
முகம் பார்த்துக் கொள்கிறாள்
கணவன் வந்ததும்
டிபன் டப்பாவை
வண்டியிலிருந்து
எடுத்துக் கொண்டு
பக்கக் கண்ணாடியில்
முகம் பார்த்துக் கொள்கிறாள்
ரா உணவு முடிந்து
படுக்கையில் சாய
விளக்கையெல்லாம்
அணைக்கும்முன்
முகம் பார்த்துக் கொள்கிறாள்.
கண்ணாடிகளைக் காதலிக்கும்
ஒருவர் உங்கள் வீட்டிலும்
இருப்பார்கள்
அவர்களுக்குக் கண்ணாடிகள்
ஏதும் பரிசளிக்காதீர்கள்
ஏதோ ஒரு வகை நோயென்று
மருத்துவரிடம் அழைத்துச்
செல்லாதீர்கள்
அவர்களிடம்
‘பள்ளிப் புகைப்படம்
பார்க்க ஆசையா?’ என்று
கேளுங்கள்
குறைந்தபட்சம்
அவருடன் நீங்களும்
கண்ணாடி முன் சற்று நேரம்
நின்று விட்டுப் போய் விடுங்கள்.
-கவிஞர் கார்த்திக் நேத்தா
திரைப்பட பாடலாசிரியர்
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் அக்டோபர் 2014 இதழில் வெளியானது இக்கவிதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்