

-லட்சுமி நடராஜன்
தபாலில் வந்த நிரஞ்சனாவின் அறுபதாம் கல்யாணப் பத்திரிகையைப் பிரித்ததுமே, சாந்தாவின் உள்ளத்தில் ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. 'என் கண்ணே... நிரஞ்சனா' கண்களில் நீர் கோத்துக்கொண்டு, தளும்பி நின்றது.
சட்டென்று தன்னைச் சுதாரித்துக்கொண்ட சாந்தா... அழைப்பிதழில் பார்வையை ஓடவிட்டாள்.
நிரஞ்சனா, சாந்தாவின் இளைய சகோதரி... அவள் தங்கை என்பதைவிட உற்ற தோழி... ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் படுத்து... சிரிப்பும் குறும்புமாக இணைபிரியாமல் திரிந்த நாட்கள்தான் எத்தனை இனிமை!
ம்... அதெல்லாம் பழைய கதையாகிவிட்டது... பாசத்தைக் கொட்டிப் பழகிய அவர்களை, சாந்தாவின் அபரிமிதமான அழகு பிரித்துவிட்டது.
பளீரென்ற உறுத்தாத நிறமும்... 'நா.பார்த்தசாரதி'யின் கதையில் வருவதுபோல ''பார்ப்பதற்கு என்று இல்லாமல்... பார்க்கப்படுவதற்காகவே அமைந்த கண்களும்... பேசுவதற்கு இல்லாமல் பேசப்படுவதற்காகவே அமைந்த உதடுகளும்" சாந்தாவைத் தனித்துக்காட்டியது. அந்த உயரமும், ராஜகுல பெண்களைப்போன்ற நளினமும்... அடர்த்தியான நீண்ட கூந்தலும்... ராஜாராமை கவர்ந்ததைவிட, அவனது அம்மா பார்வதியை மிகவும் கவர்ந்துவிட, மறுமாதமே திருமணம் நடந்துவிட்டது. எழுதப்படாத ஒப்பந்தப்படி... அவள் அந்த வீட்டின் கொத்தடிமை ஆனாள்...