

இப்போதெல்லாம் சிறு வயது குழந்தைகளுக்கு கூட கண்களின் கீழே கருவளையம் வருகிறது. பாரம்பரிய மருத்துவ காரணங்களாலும் கருவளையம் ஏற்படலாம். சுற்றுசூழல் மாசு ஆனாலும், மனஅழுத்தத்தாலும் உண்டாகலாம். அலைபேசி, கம்ப்யூட்டர் போன்றவற்றை தொடர்ந்து பார்ப்பது, தூக்கமின்மை போன்றவையும் கருவளையத்தை ஏற்படுத்தும்.
ஐ ஸ்டிமிலேட்டிங் சிகிச்சை செய்து கொள்ள கருவளையம் மறையத் தொடங்கும். முதலில் கண்களுக்கு அடியில் ஜெல் தடவி பின் கண்ணை விட்டு சற்று தள்ளி ஸ்மிலேட்டிங் கருவி வைத்து மசாஜ் செய்து விடுவர்.
இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்தோ அல்லது வெள்ளரியை ஸ்லைஸாக வெட்டி கண்களின் மேல் வைக்க கண் குளிர்ச்சி அடையும். கருவளையம் வருவது குறையும்.
மேலும் சிலருக்கு கண்களுக்கு அடியில் பை போன்று வீங்கியிருக்கும். அதே போல் சின்ன கொப்புளங்கள் மாதிரி கொழுப்பு கட்டிகள் அதிகமாக இருக்கும்.
இது பாரம்பரிய காரணங்களாலும், கண்களுக்கு கீழ் நீர் சேர்ந்தாலும் ஏற்படுகிறது. இதற்கும் தகுந்த மருத்துவரிடம் ஸ்டிமிலேட்டிங் சிகிச்சை எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
நம்மில் பலருக்கும் இருக்கும் மற்றொரு பிரச்சினை கண்களைச் சுற்றி, கண்களின் ஓரங்களில் கோடுகள் அதிகமாக வருவது. இது வயதான காலத்தில் வந்தால் நார்மல். நடுத்தர வயதில் வருவதற்கு காரணமாக சிலவற்றை சொல்லலாம்.
திடீரென எடை குறைவதால் கண்களைச் சுற்றி கோடுகள் தோன்றும்.
சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.
சரியான உணவு எடுத்துக் கொள்ளாதது, தவறான, தரமில்லாத மேக்கப் முறைகளாகும் கண்களைச் சுற்றி கோடுகள் தோன்றும்.
அதிகமாக வெயிலில் அலையத் கூடியவர்கள், கண்ணை அடிக்கடி சுருக்கிக் கொண்டு பார்ப்பதாலும் கோடுகள் உண்டாகும்.
இதற்கு, கண்களுக்கு கீழே, புருவங்களுக்கு மேல் உள்ள அழுத்தம் புள்ளிகளை அறிந்து நான்கு முறை வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து கண்களின் சோர்வு நீங்கும். கோடும் மறையத் தொடங்கும்.
வைட்டமின் ஈ ஆயிலை கண்களுக்கு அடியில் சுண்டு விரலால் தடவி பத்து நிமிடம் ஊறிய பிறகு மெதுவாக துடைக்கவும்.
உருளைக் கிழங்கு சாறு எடுத்து கண்களுக்கு அடியில் தடவினால் கருமையின் தீவிரம் குறையும்.
குளிர்ந்த நீரால் கண்களை கழுவி வர கண்கள் சுத்தமாக இருக்கும்.
ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் இளநீர் குழம்பை வாங்கி இரண்டு சொட்டு கண்களில் விட்டால் கண்களின் சூடு குறையும். அழுக்கும் வெளியாகும்.
விளக்கெண்ணெயை புருவங்களிலும், இமைகளிலும் தடவி வர கண்கள் குளிர்ச்சி பெறும்.
மஞ்சள் வாழைப்பழத்தை மசித்து கண்களின் மேல் வைத்திருந்து பின் கழுவ கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
வெள்ளரி, நுங்கு என நீர்ச்சத்து நிறைந்த பழங்களை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு, கண்களும் ஆரோக்கியமாக இருக்கும்.