

வருடங்கள் ஓடி விட்டன வயோதிகத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டனர் இவர்களின் பெற்றோர்கள் நிரஞ்சனும் சாந்தாவும். உடலில் சிறுசிறு உபாதைகள் வரத் தலைப்பட்டன. தங்களுடைய அப்பாவும் அம்மாவும் பேரன் பேத்தியின் அரவணைப்பில் கவனிப்பில் கவலை இன்றி கோவில் குளம் என்று சுற்றி வருவதும், வாழ்க்கை அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக செல்வதும் அறிந்து மனம் சற்று கலங்கத்தான் செய்தது இருவருக்கும்.
எந்த சுதந்திரத்துக்கு ஆசைப்பட்டு இவ்வளவு பெரிய முடிவு எடுத்தோமோ அந்த சுதந்திரம் இப்போது திகட்டுகிறது. தென்றலும், வெயிலும் மழையும் என மாறி மாறி வரும் பருவகாலம் எவ்வளவு சுவாரஸ்யமானது. அதை சுமையென்று நினைத்து சுடும் வெயில் வேண்டாம், கொட்டும் மழை வேண்டாம், குளிர்விக்கும் பனி வேண்டாம் காற்று மட்டுமே வேண்டும் என்று பிய்த்துக் கொண்டு வந்ததில் கொஞ்சகாலம் சந்தோஷம் இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் அந்தக் காற்றே சூறாவளியாக சுழன்று அடிப்பது போலவும் மூச்சுத்திணறுவது போலவும் தோன்றுகிறது. ஒருநாள் சண்டை போட்டுக் கொள்வதும் இரண்டுநாள் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிவதும், பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் ரகசியமாகப் பார்த்து மெல்ல மெல்ல புன்னகைத்து பேசி அதுகூட நல்லாத்தானே இருந்தது. உதறிக்கொண்டு வெளியில வந்து என்ன சாதிச்சோம் வெறும் தனிமைதான் கண்டபலன் என சாந்தா அடிக்கடி யோசித்தாள்.