

பளிச்சென்று கண்களில் ஏதோ வெளிச்சம் பட்டது போல் இருக்கவே கண்களைத் திறந்தார் ஆதிகேசவன். ஜன்னல் வழியாக கசிந்த வெளிச்சத்தில் அருகில் இருந்த செல்ஃபோனை தட்டுத்தடுமாறி எடுத்து, அதன் ஸ்கிரீனில் கண்களை இடுக்கிக் கொண்டு மணியைப் பார்த்தார். இரண்டு முப்பது என்று காட்டவே, பக்கத்தில் படுத்திருக்கும் பேரன் நிஷாந்தின் தூக்கம் கலையாதபடிக்கு நிதானமாகத்தான் எழுந்தார். காலைத்தரையில் ஸ்திரமாக ஊன்றி பக்கத்தில் வைத்திருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் கண்ணை இருட்டிக் கொண்டு வரவே, அப்படியே படுக்கையில் சரிந்து உட்கார்ந்துவிட்டார்.
இயற்கை உபாதை எழுப்பவேதான் கட்டிலில் இருந்து இறங்கினார். படித்துப் படித்து சொல்லி விட்டுத்தான் படுத்தான் நிஷாந்த்.
“என்னை எழுப்பாம பாத்ரூமுக்கு போகாதீங்க” என்று.
பாவம் புள்ள ராத்திரி நெடுநேரம் மீட்டிங் பேசிட்டு இருந்திட்டு லேட்டாத்தான் படுத்தான். காலையிலேயும் சீக்கிரமே எழுந்திட வேண்டியதா இருக்கு. அசந்து தூங்கறவனை தொந்தரவு பண்ண வேண்டாமேங்கற ஆதங்கத்திலதான் தானாகவே இறங்கினார். ஆனால் பாவம் இயலாமையில் படுக்கையில் சரிந்தவர் அதிலேயே சிறுநீர் கழிக்கும்படி ஆகிவிட்டது. துடித்துப் போய்விட்டார் மனிதர்.
“நிஷா! நிஷா, எழுந்திருப்பா” என்று குரல் நடுங்க அழைக்கும் போதே அழுதுவிட்டார்.
ஒரு அழைப்பிலேயே விழித்துக் கொண்ட நிஷாந்த், “தாத்தா என்னாச்சு” என பதறி எழுந்து அவரை கைத்தாங்கலாக தூக்கி நிமிர்த்தி உட்கார வைத்தான்.
“இங்கேயே போயிட்டேன்டா கண்ணா” என்று குழந்தைபோல் அழுதபடி அவமானம் இயலாமை எல்லாவற்றையும் விட பேரனுக்கு இப்படி ஒரு சிரமத்தைக் கொடுத்துவிட்டோமே என்ற கழிவிரக்கம் மேலோங்க தவித்துப் போய்விட்டார்.
“விடுங்க தாத்தா இதுக்குப் போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க” என்றவன் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த தங்கை நிவேதாவையும் எழுப்பி வந்து அவருக்கு உடைமாற்றிவிட்டு ஆசுவா
சப்படுத்தி மெத்தை விரிப்பு மாற்றி படுக்க வைத்தான்.
“குழந்தைகளா! எங்க ரெண்டு பேராலயும் உங்களுக்கு ரொம்பக் கஷ்டம்ப்பா. சந்தோஷமா வாழ வேண்டிய வயசில இப்படி எங்களோடவே உங்க வாழ்க்கை கழியுதே” என்று தாத்தாபாட்டி இருவரும் விடிய விடிய புலம்பித் தள்ளி விட்டார்கள்.