

பரபரப்பாக பாட்டியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ள, நடக்கும் அத்தனை விஷயங்களையும் நிவேதா படும் அவஸ்தையையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் நிஷாந்த். அதற்குள் பள்ளி வேன் வந்துவிடவே அண்ணன் தங்கை இருவரும் தாத்தா பாட்டியிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.
மனைவியைப் பற்றி அதிருப்தியாக கொஞ்ச நாட்களாக மகன் பேசுவதை அவர்களும் உணர்ந்துதான் இருந்தார்கள். ஆனால் அது இந்தளவு குழந்தைகளை பாதிக்கும் அளவில் வெடித்திருக்கும் என்று உணரவில்லை.
“என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க” என்று சாவதானமாக மாலையில் அலுவல் முடித்து வந்து விசாரித்தான் நிரஞ்சன்.
“சும்மாதாம்ப்பா இப்ப விவசாய வேலை ஒண்ணுமில்லை. அலுப்படிச்சுக்கிட்டு சும்மா உக்காந்து கிடக்கறதை இங்கதான் வந்து குழந்தைகளோடவும் உங்களோடவும் இருந்திட்டுப் போகலாமேன்னுதான் வந்தோம் வேற ஒண்ணும் விசேஷ காரணமா இல்லைப்பா” என்றார் ஆதி.
தன்னிடம் இதே கேள்வியைக் கேட்ட மருமகளிடம் தனசேகரியும் கணவர் சொன்னபதிலையே சொல்லிச் சமாளித்தாள்.
ஆனால் எத்தனை நாள் மூடி மறைக்க முடியும். ஒருநாள் குழந்தைகள் பள்ளி சென்றிருந்த நேரம் தாங்கள் இருவரும் பிரிஞ்சிட முடிவு செய்திருப்பதாக பெத்தவங்கிட்ட சொல்லிவிட்டான் நிரஞ்சன். பக்கத்தில் சாந்தாவும் இருந்தாள். முதியவர்கள் நிலை குலைந்து போனார்கள்.
“குழந்தைகளைப் பத்தி நினச்சுப் பார்க்க மாட்டீங்களா. நம்ப குடும்ப கவுரவத்த நினைக்க மாட்டீங்களா. வயசான காலத்தில எங்க தலையில இப்படி நெருப்பை அள்ளிக் கொட்டுறீங்களே” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள். இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்கள். இந்த விபரீத முடிவு வேண்டாம்மா கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கீங்களே இப்ப திடீர்னு என்னப்பா ஆச்சு எங்களாலேயே தாங்க முடியலையே பிள்ளைங்க என்ன ஆகும்னு கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டீங்களா என்று விதவிதமாக அழுது புலம்பி ஆக்ரோஷமாகப் பேசி என்ன செய்தும் ஒரு பலனும் இல்லை.