

மணக்கும் தோட்டமும், மறையாத நினைவுகளும்
கேட்டைத் திறந்தவுடன் ஜாதி மல்லி, பிச்சை, சம்பங்கி பூக்களின் கலந்த மணம் மூக்கைத் துளைத்தது. ஒரு கணம் மூச்சை ஆழமாக இழுத்து அந்த வாசனையை உள்ளே நிறைத்துக்கொண்டார் ருத்ரமூர்த்தி. அந்த வாசனையில் இன்னும் சுஜாவின் விரல் தடங்கள் இருந்தன.
வீட்டைச் சுற்றியிருந்த தோட்டம் முழுவதும் ஒரு வாரமாக உதிர்ந்த பூக்களும், இன்று புதிதாக மலர்ந்த பூக்களும் கலந்து ஒரு கதம்ப வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தன.
“சுஜி இருந்திருந்தா தோட்டம் இப்படியா இருக்கும்…? சுஜாவிற்கு எதுவுமே சுத்தமாக இருந்தால்தான் பிடிக்கும்…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கதவைத் திறந்தார்.
உள்ளே சென்று நேராக அறைக்குள் இருந்த சுஜாதாவின் புகைப்படத்தின் முன் நின்றார். புகைப்படத்தில் அவள் வழக்கம்போல் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
“வந்துட்டேன் சுஜி… முதல்ல உன்னோட தோட்டத்தைச் சுத்தம் பண்ணிட்டு வர்றேன். அப்புறம் உனக்கு விளக்கு போடுறேன்… சரியா?” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.