மென்மை என்றாலும் - அதன்
மேன்மை என்றாலும்
பெண்மை என்னும் சொல்லே
பொருந்தும் !
பொறுமை என்றாலும்- மனித
பாரம் தாங்கும் நிலமென்றாலும்
பெண்களே நினைவுக்கு வருவர் !.
அவர்கள் அன்பிற்கு அடிமையாகி .
அளவில்லா பாசத்தையே
அள்ளித் தருபவர்கள் என்று
சொல்லித் தெரியவேண்டியதில்லை !
தார்மீகமாக தலை குனிந்து
தாலியைக் கட்டிக்கொண்ட
தர்மத்திற்காக....
எண்ணற்ற பொறுப்புகளை
இல்லம் தோறும் கடமையாக...
சிரித்த முகத்தோடு
செவ்வனே செயல்படுத்தும்
சீர்மிகு தாய்க்குலத்தை
சீர்வரிசை, சீதனங்களை
முன்னிறுத்தி....
துன்புறுத்தாதீர்கள் !
தன் மனதிலிருப்பதை
தெரியப்படுத்தாமல்,
தன்னை சார்ந்தவர்களின்
தேவையை மட்டுமே
திரும்ப பிரதிபலிக்கும்
கண்ணாடிகள் அவர்கள் !
கண்ணாடிகள் உடைந்தாலும்
காண்பவரின் உருவத்தையே
கண்களுக்கு காட்டுகின்றன.!
காயம்பட்ட அதன் உள்ளத்தை
காட்டுவதில்லை !
ஆகவே அன்பு என்கின்ற
ஆயுதம் மட்டுமே கொண்டு
அரவணைத்து அவர்களை
கவனமாக கையாளுங்கள்.