

திருவிழா நிகழ்வுக்கு, தெய்வ தரிசனத்திற்கு,
கல்யாணம் காட்சிக்கு, அன்பின் மொழிக்கு,
அமரர் சாந்திக்கு, ஆக பெரும் வெற்றிக்கு,
இப்படி அனைத்துக்குமான அடையாளமாக
அழகான சாட்சியாக நிற்பது…
வண்ண மலர் மாலைகளும்
வாசனை தரும் பூக்களும் தானே !
பலவகையிலும் பயனளித்து,
புத்துணர்வை பரிசளிக்கும் பூக்களை,
பூத்து குலுங்குமுன்னே
பறித்துச் செல்லுதலும்
பாழாக்குவதும் முறையோ!
வேர்விட்ட காலம் தொட்டு
நீர் விட்டு வளர்த்தவரை
கண்ணீரில் தவிக்க விட்டு,
வண்ணப் பூச்செடியை
வேரோடு பிடுங்கி எறிதல்
என்ன நியாயமோ?!
அன்பு மகளாக
இல்லதரசியாக
ஏன் அன்னையாக
வலம் வரவேண்டிய
பெண்மையின் சின்னமான
வெள்ளந்தி பூக்களை
வெறிகொண்டு சிதைத்து
வன் கொடுமை செய்தல் நீதியா?!
இப்படி எத்தனை பூக்கள்
மலருமுன்னே
மரணத்தை முத்தமிட்டன!
அடுத்தடுத்து வரும் செய்திகளில்
அவை மறக்கப்பட்டன!
சட்டம் கடுமையானால்
குற்றம் குறையலாம்!
அதுவரை குற்றவாளிகளிடம்
விண்ணப்பிப்பது இதுதான்.
"இனியாகிலும் இப்படி
பூக்கள் பறிக்காமல்
செடியிலேயே விடுங்களேன்!"