

காலை எட்டு முதல் ஒன்பதரை மணிவரையிலான சுபமுகூர்த்தத்தில் நடக்க வேண்டிய தனது திருமணம், இன்னும் சிறிது நேரத்தில் நின்று விடும் என்கிற உண்மை தெரியாத சினேகா, அந்த அதிகாலை ஐந்து மணிக்கே கண்விழித்து மணமகள் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.
இத்தனை சீக்கிரம் எழுந்ததில் பழக்கம் இல்லாத விழிகள் ஒத்துழைப்பு தராமல் நெருப்பு போல எரிந்தன. பல்லைக் கடித்தபடி சமாளித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்குத் தானே...
கண்கள் உறக்கத்திற்கு ஏங்க, தரையில் போர்வை விரித்து படுத்துக் கிடந்தவர்களை ஜென்ம விரோதி போல முறைத்தாள். அவள் மனம் புரிந்தவளாய் மேக்கப் பெண் “கொஞ்சம் சமாளிச்சுக்குங்க, ஒரு ஒன் அவர்ல முடிச்சுடலாம்..” என்ற வழக்கமான வியாபாரப் பொய்யை சொல்லிவிட்டு ஜடையைப் பிரிக்கத் துவங்கினாள்.
சினேகா அந்தக் கொடுமையைத் தாங்கிக் கொண்டாள். இருபதாயிரம் ரூபாய் செலவு மேக்கப் அல்லவா. தனக்கே அக்கறை இல்லாவிட்டால் எப்படி? தனது சென்னை ஐடி வாழ்க்கையின் முக்கால் மாத சம்பளம் அது. மனசு கணக்குப் போட்டு உறுத்தியது.