

அப்பாவின் அபாயக் குரல் உணர்ந்த ரமேஷ் அடுத்த நிமிசமே அங்கிருந்தான். “என்னாச்சுப்பா ஏதாவது சிக்கலா..?”
கதவின் தாழ்ப்பாளில் கை வைத்துக் கொண்டவர் ரகசியக் குரலில் சொன்னார். ”கதவை கிதவைத் திறந்திடாதே. மயக்கம் போட்டுடுவே. எல்லோரும் மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட்சுக போல. தாறுமாறாக் கிடக்கறானுக. அத்தனை பேரும் தண்ணில மிதக்கிறானுக. வாந்தியெடுத்து ரூம் பூராவும் நாறடிச்சு.. வயித்தைக் குமட்டுதுடா...”
ரமேஷ் நொடி நேரம் அதிர்ந்தவன் தலையிலடித்துக் கொண்டான். “கிழிஞ்சது போங்க. இவனுக்கு யாரு ஊத்திக் கொடுத்தது? கண்ணு மண்ணு தெரியாம குடிப்பானே. அவ்வளவு சீக்கிரம் அவனுக்கு தெளியவும் செய்யாது..”
நாக்கைத் துருத்தினார் அவர். “கூடவே தானே இருந்தே. எப்படி ஏமாந்தே? எதுக்குடா உன்னை மாப்பிள்ளைத் தோழனா துணைக்கு நிறுத்தினேன். ம்?”
ரமேஷ் அவசரமாக யோசித்து “சின்னக் குழந்தையா அவன். கூடவே இருன்னா எப்படி.. மனுசனுக்கு வேற வேலை இல்லையா என்ன.? மெட்ராசுல இருந்து சித்தி வந்திருந்தாளே, அவளை ட்ராப் பண்ண லாட்ஜ்க்குப் போயிருந்தேன். அந்த கேப்ல இது நடந்திருக்கணும். ப்ச்...என்னப்பா இது இந்த நேரத்துல போய் இப்படி.. தேவையில்லாத டென்சன். சே.”
“அப்பன் இல்லாதவனாச்சேன்னு அனுதாபப்பட்டு முன்னாடி நின்னு கல்யாணத்தை நடத்தி வெச்சா பண்ணியிருக்கிற வேலையைப் பார்த்தியா. நல்ல ஃப்ரெண்ட்சுக போ. குடி கெடுக்க வந்த பயலுக.” தலையிலடித்துக் கொண்டார்.
“…..”