

இளம்பிறை சினேகாவையே வெறித்தாள். அவளது மணமகள் அலங்காரம் மனதைப் பிசைந்தது. எல்லாம் வீணா கடைசியில்..? நோ, விடமாட்டேன்.
போன் எடுத்து வினோத்துக்கு அழைத்தாள்.
“ஹலோ வினோத்.. எங்கேடா இருக்கே. இன்னும் விடியலையா உனக்கு.? லாட்ஜ்ல என்னடா பண்றே? சீக்கிரம் மண்டபத்துக்கு வா.. இங்கே ஒரு பிரச்னை..”
“இப்போ அவனை எதுக்குக் கூப்பிடறே..” கலங்கின விழிகளுடன் கேட்ட சினேகாவை முறைத்தாள். “பாருங்கப்பா, எங்ககூட ஒர்க் பண்ற வினோத்தைத் தெரியுமா உங்களுக்கு?”
“ம். சினேகா அறிமுகப்படுத்தி வெச்சிருக்கா.”
“ரைட். அவனைப் பத்தின ஒரு உண்மையைச் சொல்றேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி சினேகாவைக் காதலிக்கிறதா சொல்லி அவகிட்டே அவன் ப்ரபோஸ் பண்ணினான்..”
“என்னது.?” மகளைப் பார்த்தார் குழப்பமாக. “அவ என்கிட்டே இதெல்லாம் சொல்லவே இல்லையே..” என்றார் அபத்தமாக.
“சினேகா அதை ஏத்துக்கலை. எங்க குடும்பத்துல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. உறவுஜனம் எங்களை ஒதுக்கி வெச்சுடும்! பெத்தவங்களுக்கு பெரிய தலைகுனிவாகிடும். தேவையில்லாம ரிஸ்க் எடுக்க நான் விரும்பலைன்னு சிம்பிளா சொல்லி நிராகரிச்சுட்டா..”
சினேகாவை பேரன்புடனும், பெருமதிப்புடனும் பார்த்தார்.
“பாருங்கப்பா வினோத் உங்க ஜாதி கிடையாது, ஆனா நீங்க இப்போ பார்த்த ரெண்டு பேரையும் விட நல்லவன்.! நிறம், மணம், சுவை, திடம் நிறைந்தவன். அவங்கப்பா கோயம்புத்தூர்ல ஒரு பர்னிச்சர் ஷோரூம் நடத்திட்டு வர்றாரு. ஒரே மகன். பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, அன்பான குடும்பம்.”
“……”