

“டேய் கண்ணா… உனக்கும் வயசு போயிட்டே இருக்கு… உன் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல…”
இந்த வார்த்தைகளை கண்ணன் வாழ்க்கையில் ஆயிரம் முறை கேட்டிருப்பான்.
ஆனா அந்த வார்த்தையை சொன்னவர்களில் ஒருவராவது அவன் வாழ்க்கையை தூக்கி சுமந்திருக்கிறார்களா என்றால் அதற்கான பதில் மட்டும் அமைதிதான்.
கண்ணன் பிறந்த வீடு சேலம் அருகே உள்ள ஒரு சிறிய ஊர். அவன் தந்தை முருகேசன். வேலைக்கு போவது அரிது. குடும்பத்தை நடத்துவது பற்றி பொறுப்பே இல்லாத மனிதர். சில நாட்கள் கூலித்தொழில். பல நாட்கள் தேநீர் கடை அரசியல். பின்பு அந்த ஏரியாவில் உள்ள அனைத்து மது கடைகளும் அத்துபடி... மீதமுள்ள நேரம் “நாளைக்கு நல்லது நடக்கும்” என்ற வெறும் பேச்சு. ஆனால் வீட்டில் 3 குழந்தைகள்.