

மூன்று மணி இருக்கும். குடுகுடுப்பைச் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்துபோனது மங்களத்திற்கு.
"ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா...."
விழித்துக்கொண்ட மங்களம் உன்னிப்பாக கவனித்தாள். ஏதாவது நல்ல வார்த்தை சொல்லுவானா...
"ஆத்தா, நல்லா கேட்டுக்க. இந்த வீட்டு ராஜகுமாரனுக்கு நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஜக்கம்மா சொல்றா..."
சட்டென எழுந்து உட்கார்ந்தாள் மங்களம். செல்வனைப் பற்றியல்லவா சொல்கிறான்...
ஆனாலும் அவன்தான் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டானே... எல்லாம் இந்த மனிதன் பண்ணினதுதானே.!
"கல்யாணம் பண்ணிவை" என்றான். என்ன சம்பாதித்து வைத்திருக்கிறாய் என்றபடி தள்ளி விட்டார். கோவித்துக் கொண்டு போனவன்தான். ஒரு வாரம் ஆகிறது. எங்கே போனானோ, எப்படி இருக்கிறானோ... ஒன்றும் தெரியவில்லை.
கண்கள் கசிந்தன. மணிமாறனோ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.
"என்ன மனுஷன் கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாமல்..."