

குழந்தை 'ம்மா' என்று அழைத்தபடி மண்டியிட்டு ஓடிவந்து மடியில் ஏறியபோது, அப்படியே அந்த மெழுகு பொம்மையை அள்ளி அணைத்து கன்னத்தில் கன்னம் வைத்து மெய்மறந்து உட்கார்ந்திருந்தாள் சிந்து.
கண்களில் இருந்து அவளை அறியாமலேயே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
"தாமரை மட்டும் இல்லேன்னா உன்னை இழந்திருப்பேன் கண்ணா. இழந்திருப்பேன்னு சொல்றது கூட தப்பு; உன்னைக் கருவிலேயே கொன்னிருப்பேனே என்று சொல்லி குழந்தையை இறுக அணைத்து கண்ணீர் வழிய முத்தமிட்டாள். என்னை மன்னிச்சிடுங்க தங்கம் ரொம்பக் கோழையா இருந்திட்டேன்டா. தாமரைதான் தைரியம் கொடுத்து எனக்கு இந்த பாக்கியம் கிடைக்க வச்சாங்க. என் மனசுக்குள்ள எறிஞ்சிட்டிருந்த நெருப்பை அணைச்சு உன்னை மீட்டுக் குடுத்தாங்கடா செல்லம்” என்று மானசீகமாக மகனிடம் மன்னிப்பை யாசித்தாள்.
ஆம் நாட்கள் தள்ளிப் போய்விட்டது என்று தெரிந்தபோது சிந்து கொஞ்சமும் சந்தோஷப்படவேயில்லை. பயமும் பதட்டமுமே அவளைப் பற்றிக் கொண்டன.