

முகுந்தன் கைகளால் முகத்தை இறுக மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
“முகுந்த்… முகுந்த்… டேய் என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டவாறு அவனது கைகளை விலக்கி அருகில் அமர்ந்தான் அருண்.
“ப்ச்… ஒண்ணும் இல்ல அருண். விடு…” என்று கையை எடுத்துக் கொண்டான்.
“டேய், என்ன விளையாடறியா? 'அவசரமா முக்கியமான விஷயம் பேசணும், உடனே வா’ன்னு சொல்லிட்டு இப்ப ஒண்ணும் இல்லன்னா என்னடா அர்த்தம்?” என்று அருண் அவன் முகத்தை நிமிர்த்தினான்.
முகுந்தின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன.
“ஹேய் பேபி… என்னடா இப்படி? சொல்லுடா…” என்றவன், “இங்க பேச வேண்டாம். வெளியே போய் பேசலாம்,” என்று அவனை அழைத்து ஊட்டி கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றான்.
வெளியில் மெதுவான பனித்துளிகள் விழுந்துக் கொண்டிருந்தது. ஊட்டியின் குளிர் அந்த இரவையே சோகமாக மாற்றியிருந்தது. இருவரும் சில நிமிடங்கள் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
சாப்பிட்டு முடித்த பிறகு நீண்ட நேரம் அமைதியாக இருந்த முகுந்த், மெதுவாக,
“அருண்… அபர்ணா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்கா…” என்றான்.
“என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியடைந்தான் அருண்.
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை?”
முகுந்தும் அபர்ணாவும் பள்ளி நாட்களிலிருந்தே காதலித்து, திருமணம் செய்தவர்கள். அபர்ணா சிறுவயதிலேயே அம்மாவை இழந்ததால் பாட்டி வளர்ப்பில் வளர்ந்தாள். முகுந்தின் பெற்றோர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், அவனை அளவில்லா அன்புடன் வளர்த்தனர்.
அருணும் முகுந்தும் LKG முதல் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சென்னையில் பெரிய ஐடி நிறுவனங்களில் நல்ல பதவியில் வேலை பார்த்தனர். வேலை பிஸி இருந்தாலும், குடும்ப வாழ்க்கையை அமைதியாக வாழ வேண்டும் என்பதே முகுந்தின் ஆசை.
திருமணம் செய்யும் போது அபர்ணா,
“முதல்ல நாம ஒரு சொந்த வீடு வாங்கணும்,” என்று ஆசையோடு கூறியிருந்தாள்.
அந்த ஆசைக்காக இருவரும் கடுமையாக உழைத்தனர். வீடு வாங்கும் நாளில் குழந்தைகளைப் போல சந்தோஷப்பட்டார்கள். அந்த வீட்டின் சுவற்றில் அவர்கள் கனவுகளும் சிரிப்புகளும் நிரம்பியிருந்தது.
ஆனால் அதற்குப் பிறகுதான் அவர்களுக்குள் விரிசல் ஆரம்பித்தது.
அபர்ணா வீட்டைத் தன் பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொண்டாள். அதே சமயம் ஆபீஸில் முகுந்தைவிட உயர்ந்த பதவியையும் பெற்றாள்.
அலுவலகத்தின் அதிகாரம் மெதுவாக வீட்டிற்குள்ளும் பிரதிபலிக்க ஆரம்பித்தது.
முகுந்த் வேறு கம்பெனிக்கு வேலை மாற்றிக் கொண்டான்.
முகுந்தின் பெற்றோர் சில நாட்கள் வந்து தங்கியிருந்தபோது கூட அபர்ணா முகம் காட்ட ஆரம்பித்துவிட்டாள்.
இதற்கும் முகுந்தின் அம்மா அவனை ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையைப் போல வளர்த்திருந்தார். 'இல்லை' என்ற வார்த்தையே அவன் வாழ்க்கையில் இல்லை.
தன் பெற்றோர் பட்ட கஷ்டம் போதும்; இனிமே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவன் ஆசை.
ஆனால், அபர்ணா அவர்களிடம் நடந்து கொண்ட விதம் அவனை மெதுவாக உடைக்க ஆரம்பித்தது.
எதற்கெடுத்தாலும் ஈகோ பார்த்து சண்டை போட்டாள். ஊரில் எந்த நிகழ்வுக்கும் வர மறுத்தாள். அவளது பாட்டி, சித்தி, உறவினர்கள் என தன் பக்கம் மட்டும் உறவுகளை சேர்த்து வைத்துக் கொண்டாள்.
முகுந்த் வேலை பார்த்துக்கொண்டே சில படிப்புகளையும் முடித்தான். அதன் பலனாக அவனுக்கும் பெரிய பிரமோஷன் கிடைத்தது. சம்பளமும் அபர்ணாவை விட அதிகமானது.
அதைக்கண்ட அபர்ணா தனது ஆபீஸில் ஜெர்மன் கிளைக்கு புராஜக்ட் லீடராக மாற்றம் கேட்டுப் பெற்றாள். கிளம்பும் நாளில்தான் முகுந்திடம் சொன்னாள்.
அதன்பிறகு இரண்டு வருடங்கள்.
முகுந்த் எத்தனையோ முறை போனில் அழைத்து,
“சம்பாதிச்சது போதும் அபி… திரும்பி வா. நாம குடும்பமா வாழணும்,” என்று கேட்டிருக்கிறான்.
ஆனால் அவள் கேட்கவில்லை.
“பணம்… பணம்… பணம்…” அதுவே அவளது குறிக்கோளாக மாறியிருந்தது.
“அருண்… நான் உங்கிட்ட சொல்லலடா. நீ பார்த்த அபர்ணா வேற… இப்ப இருக்கறவ வேற…” என்றான் முகுந்த்.
“சென்னை வந்ததும் அவள் கேட்டது இன்னும் என் காதுல ஒலிக்குது. ‘என்ன முகி… எப்ப உங்க அம்மா அப்பாவ பேக் பண்ணப் போற? சீக்கிரம் அனுப்பு. என் தம்பி இங்க வந்து காலேஜ் சேரப் போறான். இவங்க எதுக்கு இங்க எக்ஸ்ட்ரா லக்கேஜா இருக்கணும்?’ன்னு கேட்டா.”
அருணின் முகம் இறுகியது.
“எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. ‘என்ன நினைச்சுட்டு இருக்கே? அவங்க இங்கேதான் இருப்பாங்க,’ன்னு சொன்னேன். அதுக்கே, ‘ஹலோ… இந்த வீடு என் பேருல இருக்கு. நான்தான் டிசைட் பண்ணணும்,’ன்னு சொல்றா.”
முகுந்தின் குரல் நடுங்கியது.
“அட… அவங்க பாட்டி இனி எத்தனை வருடம் இருக்கப் போறாங்க? நாம அவங்களுக்கு வீடு வாங்கி தங்க வைப்போம்னு சொன்னா கூட ‘நோ’ன்னு சொன்னா.”
“நான் எங்க அப்பா அம்மாவை அனுப்பி வைச்சுட்டேன் அருண். ‘ஆபீஸ் விஷயமா வெளிநாடு போகணும்’ன்னு பொய் சொல்லி ட்ரெயின்ல ஏத்தி விட்டேன். பழையபடி மாமா வீட்டுக்கே போயிட்டாங்க.”
அதை சொல்லும் போது முகுந்தின் கண்களில் குற்ற உணர்வு தெரிந்தது.
“அம்மா கிளம்பும்போது கூட, ‘பாத்துக்கோப்பா… சாப்பாடு நேரத்துக்கு சாப்பிடு,’ன்னுதான் சொன்னாங்க. நான் அவங்களை அனுப்புறப்போ உள்ளுக்குள் உடைஞ்சுட்டேன் டா… இதெல்லாம் நடக்கும்போது நீ அவுட் ஆஃப் கன்ட்ரி. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல…”
“அறைஞ்சன்னா பாரு!” என்று அருண் கோபமாக சொன்னான்.
“என்னடா ‘டிஸ்டர்ப்’ன்னு பேசுற?” முகுந்த் கசப்பாய் சிரித்தான்.
“அதுக்கப்புறம் அவள் மாறிடுவாள்னு நினைச்சேன். ஆனா அவ சொன்னா… ‘முகி, நீ என்னைவிட சம்பளம் ஜாஸ்தியா வாங்கறே. அதனால் நான் உன்னை பீட் பண்ணணும். அதுக்கப்புறம்தான் எல்லாமே’ன்னு. என்னால ஏத்துக்க முடியலடா…”
“ஏற்கனவே அம்மா குழந்தை பற்றி கேட்டாங்க. நான் கூட கோபத்துல, ‘அம்மா அதைப் பற்றி பேசாதீங்க. நாங்களே சொல்வோம்,’ன்னு சொல்லிட்டேன். அவங்க முகம் வாடிப் போச்சுடா…”
“இதோ இப்ப கூட அவ ஜெர்மன்ல இருக்கான்னு போனா, சொல்லாம இந்தியா வந்துட்டா. நான் ஆறு மாதம் கழிச்சு வந்தப்போ, மறுபடியும் ஃபிளைட் ஏறிட்டா.”
அவன் தலையை குனிந்தான்.
“நான் என்ன பணம் சம்பாதிக்கிற மெஷினாடா? உணர்ச்சிகள் இல்லாத ஜடமா வாழ இந்த வாழ்க்கை? இப்படி பணத்துக்குப் பின்னால அலைய எதுக்கு கல்யாணம்னே தெரியல.”
“இப்ப நான் சொந்த ஊருக்கும் போக முடியாம… வீடும் இல்லாம… ஹோட்டல்ல தங்குற நிலை. கடைசியாக பேசும்போது, ‘முகுந்த்… நமக்குள்ள இனி செட் ஆகாது. பிரேக் அப் ஆகிக்கலாம்,’ன்னு சொல்லிட்டு போன் வைச்சுட்டா…”
சில நொடிகள் அமைதி.
பிறகு முகுந்த் மெதுவாக,
“பொண்ணுகளுக்கு மட்டும் உணர்வுகள் இருக்குன்னு நினைக்கறாங்கடா… ஒரு ஆணோட மனசு எவ்வளவு காயப்படும் என்று ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க?” என்றான்.
அனைத்தையும் அமைதியாக கேட்ட அருண், உடனே அபர்ணாவின் எண்ணை டயல் செய்தான்.
“ஹலோ அண்ணா! எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க?” என்று ஆர்வமாக கேட்டாள் அபர்ணா.
“நல்லா இருக்கேன்ம்மா… ஆனா நான் சொல்லப் போற விஷயம் கொஞ்சம் ஷாக்கா இருக்கும்.”
“ஏன்? யாருக்கு என்னாச்சு?”
“அது வந்து… முகுந்த்…”
“முகிக்கு என்னாச்சு? அவன் எங்க இருக்கான்?”
“நாங்க இப்ப ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கோம். அவனுக்கு உடம்பு சரியில்ல. சாப்பிடாம, தூங்காம கிடந்தான்…”
அருண் அனைத்தையும் அவளிடம் கூறினான்.
“எனக்கு உரிமை இல்லைன்னா நான் சொல்றதை கேட்காதேம்மா…” என்று முடித்தான். அபர்ணா அமைதியாக இருந்தாள்.
அந்த இரவு முழுவதும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக மனதில் வந்து சென்றது. பள்ளி நாட்களில் முகுந்த் தன்னுக்காக மழையில் நின்றது. கல்லூரியில் சண்டை போட்டவர்களிடம் தன்னை காப்பாற்றியது. திருமண நாள், புதிய வீடு எல்லாமே நினைவில் வந்து அவளை உடைத்தது.
மறுநாள் அதிகாலையில் அவள் அங்கே வந்து நின்றாள்.
“டேய் முகி… என்னடா ஆச்சு உனக்கு? இப்படி தாடி வச்சிட்டு இருக்கே…” என்று அவன் கைகளைப் பிடித்தாள்.
அங்கே வந்த அருண் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“வாங்க மேடம்… நீங்க முகியை பழைய முகியா கூட வச்சுக்கல.
அபி, எல்லாரும் பெண்களின் மனவேதனை பற்றி பேசுறாங்க. ஆனா ஒரு ஆணும் உள்ளுக்குள் உடைந்து போகிறான் என்பதை யாரும் கவனிக்க மாட்டாங்க. குடும்பத்துக்காக ஓடுறான்.
பெற்றோர்களையும் மனைவியையும் சமநிலையில வைக்க போராடுறான். மெளனமாகவே வாழ்க்கையை கடத்திக்கொண்டு இருக்கிறான்.
டைவர்ஸ் என்பது இரண்டு பேரின் பிரிவே இல்ல. நம்பிக்கை, நினைவுகள், கனவுகள் உடையும் தருணம். பணம், பதவி, ஈகோ எல்லாம் வாழ்க்கைக்கு தேவைதான். ஆனா அன்பும் புரிதலும் இல்லாத வாழ்க்கை வெறுமைதான். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..."
அபர்ணாவின் கண்கள் கலங்கின. அருண் தொடர்ந்து,
“திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான பந்தம்.
குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கும். ஆனா ஈகோ மட்டும் எட்டிப் பார்க்கக் கூடாது. இப்ப உங்க ரெண்டு பேரோட பேங்க் பேலன்ஸ் நாலு தலைமுறைக்கு வரும். அதுபோதும் இனி வர்ற நாட்களில் ஈகோ மறந்து சந்தோஷமா வாழ முயற்சி பண்ணுங்க,” என்றான்.
“தேங்க்ஸ் அண்ணா…” என்று அழுதாள் அபர்ணா. “சரியான நேரத்துல எனக்கு புரிய வைச்சீங்க.”
“எனக்கு லாஸ்ட் மன்த் ரொம்ப உடம்பு சரியில்லாம போனப்போதான் புரிஞ்சது… நம்மை பாத்துக்க நமக்குன்னு ஒருத்தர் இருக்கறது எவ்வளவு பெரிய விஷயம்னு. ஆனா அவரை நானே காயப்படுத்திட்டேன்.”
அவள் முகுந்தை பார்த்தாள்.
“சாரிடா முகி… சாரி…”
முகுந்தின் முகத்தில் மெதுவாக புன்னகை மலர்ந்தது.
“அபி… நான் உன்னை ஒருநாளும் வெறுக்கல. நீ திரும்பி வந்து ‘முகி’ன்னு கூப்பிட்ட அந்த நிமிஷமே போதும். பணம் வாழ்க்கை தரலாம்… ஆனா நிம்மதியை தராது. இனிமே நாம யாரையும் ஜெயிக்க வேண்டாம்… வாழ்க்கையையே சேர்ந்து வாழ்ந்தால் போதும்,” என்றான்.
அபர்ணா அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.
அப்பறம் என்ன…
அழகான பெண் தேவதையை பெற்று முகுந்தின் அம்மா கைகளில் தவழ விட்டார்கள்.
அந்தக் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு நின்ற முகுந்தின் அம்மாவின் கண்களில் வழிந்த கண்ணீரில், ஒரு குடும்பத்தின் மீண்டும் பிறந்த சந்தோஷம் தெரிந்தது.