

மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்த தேவகி, மாநகரப் பேருந்தைப் பிடித்து சிங்கப்பெருமாள் கோவிலுக்குத் டிக்கெட் வாங்கி, சன்னல் ஓர இருக்கையைப் பார்த்து அமர்ந்தாள். அமர்ந்தவளுக்கு சிந்தனை நிலையாக இல்லை. ஒரே தலைவலி வேறு. பர்ஸில் இருந்து சின்ன தலைவலி பாம் எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டு, தன் தலையைச் சன்னல் கம்பியின் மேல் சாய்த்தாள். குளிர்ந்த காற்று முகத்தில் பட, அவள் தன்னை அறியாமல் கண்களை மூடினாள்.
கண்களை மூடியதுமே, அவளது எண்ண ஓட்டம் சற்று பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது… சின்ன வயசிலிருந்தே, சேவை செய்யணும், நாலு பேருக்கு உதவணும்னு எண்ணம் இருந்ததால்தான், இப்போ ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
திடீரென்று ஒரு குரல் கேட்டது.
“அடிங்க நாயே! கண்ண என்ன புடனியிலயா வைச்சுருக்க? வீட்ல சொல்லீட்டு வந்துடியாடா…” இந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் தேவகி விழித்துக்கொண்டாள். பேருந்தின் ஓட்டுநர் யாரையோ பார்த்துத் திட்டிக்கொண்டிருந்தார். நல்ல வேளை, யாருக்கும் ஒண்ணும் ஆகல. பழைய நினைவுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தாள் தேவகி. ஓட்டுநர் மீண்டும் பேருந்தை இயக்க ஆரம்பித்தவுடன், அவளது தற்போதைய நிலையை எண்ணினாள்.