

எனக்கு இது புதிதாக இருந்தது. அந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. இது என்ன, சபலமா, சஞ்சலமா, சங்கடமா ... என்ன ஒரு உபாதை.
உபாதை என்று சொல்வதை விட ஒரு உன்னத அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம், நான் என் வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை. செல்லமாக வளர்ந்தவள். அப்பா தமிழ் ஆசிரியர். அம்மா சும்மாவா. எல்லாம் அவள் தான். ரொம்ப கெடுபிடி.
அடிக்கடி "உலகம் கெட்டுப் போய் இருக்கிறது. ஜாக்கிரதை, ஜாக்கிரதை" என்று சொல்லி சொல்லி வளர்த்தவள்.
கடைசியாக ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சைக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டார் என் அப்பா.
வேறு வழிஇன்றி அப்பா அரவணைப்பில் இருந்த நான் 10வது வகுப்பில் Co - Ed Schoolல் சேர்க்கப்பட்டேன்.
பல நாட்கள் கடந்தன. தோழிகள் கிடைத்தனர். பலர் தோழர்களுடன் சகஜமாக பழகினர்.
எனக்கோ பயம். அதை விட கூச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி இருந்தும் சுரேஷ் மட்டும் என் மனதில், கற்பனையில், கனவில் அடிக்கடி வருகிறான்.
அவன் அவ்வளவு அழகு இல்லைதான். நண்பர்களுடன் பார்ப்பது அரிது. தனிமை விரும்பியோ என்ற சந்தேகம் வேறு எனக்கு.
என்னைப் பார்த்து ஒரு நாள், உணவு இடைவேளையில் கேட்டான். "நீங்க பக்கத்து தெரு தமிழ் ஆசிரியர் பொண்ணுதானே?"
"ஆமாம்" என்றேன். " "நீ?"
"நான் ஒரே பையன் அப்பா கிடையாது. அம்மா வீட்டு வேலை செய்து என்னை படிக்க வைக்கிறாள்."
எனக்கு அவன் மீது பரிதாபம் ஏற்படவில்லை. ஏனெனில், அவனிடம் அந்த வெளிப்பாடு இல்லை.
பின் ஏன், நான் அவனை நினைக்க வேண்டும்?
எப்படி சொல்வது...?
ஒருமுறை பள்ளி கவிதைப் போட்டிக்கு நான் தயார் செய்த ஒன்றை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன்.
படித்து விட்டு திரும்ப கொடுத்தான். அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை - தலைப்பு தவிர.
என்றும் வாஞ்சையுடன் - (என் தலைப்பு)
"மனம் என்பது குரங்கு அல்ல,
மானுடத்து மகுடம் !
அதற்கு பல பார்வை உண்டு…
காதல், கனிவு, கருணை,
கலக்கம், கலங்கம், கபடம்,
கண்ணியம் - ஆனால்,
உன்னைப் பார்த்தவுடன்
நான் கற்றுக் கொண்டது -
காதல் மட்டுமே!"
இதய வாசல் திறந்தது - அவன் மாற்றி எழுதிய தலைப்பு!
இதய வாசல் திறந்தது.
கவிதையை சமர்பிக்க மனசு இல்லாமல் தன் இதயத்தில் சுமந்து கொண்டு வீடு சென்றேன்.