

காலையில் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த போது, ஒரு காட்சி என்னை நானே கண்டறிய காரணமாகியது.
சில நபர்கள் என் பாதையில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் பின்னே வருவது மட்டும் என்னால் யூகிக்க முடிந்தது. அவர்களின் குரல்களை வைத்து அவர்கள் பெண்கள் என்று அனுமானித்துக் கொண்டேன்.
நான் அப்படியாக எந்த ஒரு சம்பாசணைகளையும் ஒட்டு கேட்பது இல்லை. அந்த அளவிற்கு நான் என் நடைப்பயணத்தில் அல்லது என் உடம்பின் மீது அதிக அக்கறை செலுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று, நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
இருந்தாலும் இதில் ஒரு உண்மை இருப்பதாக உணர்கிறேன். அதுவே எனக்கு ஒரு வலியை தந்தது.
அந்த வலியை இப்போது காண்போம்.
“அம்மா பசிக்குது” - இது ஒரு சிறுமியின் குரல்.
“எனக்கும் தான்...” தொடர்ந்தது மேலும் இரண்டு ஜீவன்களின் குரல்கள்.
“இதோ, இங்கே டீக்கடை போய் சாப்பிடுவோம் வாங்க.”
இதில் இருந்து பின்புறம் வருபவர்கள் நால்வராக இருக்கக் கூடும் என்பது என் கணிப்பு.
“அம்மா, எனக்கு பசிக்குது. வடை, டீ வாங்கிக் கொடு” - குழந்தைகள் கேட்க, அவளும் அங்கு டீ சாப்பிட வந்தவர்களிடம் “சாமி இந்த பொண்ணுக்கு பசிக்குது, ஏதாவது...” என்று சொன்னவுடன், ஒருவர் 8 வடைக்கு உள்ள காசை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு சாப்பிட சொல்லிவிட்டு சென்றார்.
நானும் என் பங்கிற்கு டீ சாப்பிடேன்.
"அம்மா ‘டீ’ வேணும்."
உடனே நான்கு டீக்கு உள்ள காசையும் கடைக்காரிடம் கொடுத்து அவர்களுக்கும் டீ கொடுக்க சொன்னேன்.
அந்த வடையை அந்த பெரிய பெண் சாப்பிட்ட விதம் இருக்கிறதே, அப்பா, எவ்வளவு சந்தோஷம். தம்பி, தங்கச்சிக்கு ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொல்லி பிறகு, டீயை கரிசனத்துடன் ஊட்டிய விதம் அன்பின் பரிபூரணம்.
அவர்களிடம் இருந்த ஊசி மற்றும் பாசி மாலையை வாங்கினேன். என்னைப் பார்த்து இன்னும் சிலர் வாங்கத் தொடங்கினர்.
பிறகு மெதுவாக அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
நான் அவர்கள் பின் சற்று மெதுவாக சென்றேன். இப்போது என் கையில் ‘கைபேசி’ - அதில் பாட்டு ஒலித்து கொண்டு இருந்தது.
நான் அவர்களை கவனிக்கவில்லை என்பதற்கான ஏற்பாடு.
பேச்சு தொடர்ந்தது.
“மீனா, உனக்கு ஒன்னு சொல்றேன். நமக்கு அப்பா இல்லை. அம்மா முடியாம இருக்கா. அதனால அவ சொல்ற அந்த லோடுமேனை கட்டிக்கோ; அம்மாவையும் பார்த்துக்கிட்டு, உன் வாழ்க்கையும் பார்த்துக்கொண்டு இந்த ஊரிலே இருக்கலாம். எதிர்வீட்டு ஏஜெண்ட் வெளிநாடு போய் வீட்டு வேலை செய்து பிழைக்க ரூ.10000 கேட்கிறான் பாரு, அதை கண்டு ஏமாறதே? இங்கேயே நீ 4 வீட்டில் பாத்திரம் கழுவி நல்ல பெயர் வாங்கி வைத்து இருக்கிறாய். போதும் உனக்கு இது என்று எனக்கு தோன்றுகிறது. நம்ம ஊரு தான் நமக்கு சுகம்."
சம்மதம் என்று சொன்னாள் என்று நினைக்கிறேன். அதற்குள் அவர்கள் பேச்சு மாறி வேறு விதமாக சென்றது.
வாழ்க்கையில் சிறு சிறு ஆலோசனைகள் நம்மை கட்டிப் போடுகின்றன.
அன்பு திழைக்கும் - அங்கே உண்மை இருக்கும் பட்சத்தில்.