

தன் மடியில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுது அரற்றும் மருமாளைத் தேற்றும் வழியறியா நிலையில் கலங்கி வீற்றிருந்தாள் விசாலாட்சி. மற்றொரு புறம் முற்றிலும் சமைந்த நிலையில் சோபாவில் அமர்ந்திருக்கும் அண்ணன் ஜம்புலிங்கம், இருவரில் யாரைத் தேற்றுவாள் பாவம்!
தாயில்லாப் பெண் பிரகதிக்கு அவள் இந்த பூமியில் ஜனித்த நாள் முதல் சகலமுகமாக இருப்பவள் விசாலாட்சிதான்.
இருதயக் கோளாறு காரணமாக திருமண வாழ்வை ஒதுக்கிய விசாலாட்சியை முற்றிலுமாக ஆதரித்த அண்ணி அருளரசி, விசாலாட்சிக்கு தெய்வத்துக்கும் ஒருபடி மேலேதான்.
கர்ப்பகாலத்தில் அவள் கால்கள் தரையில் பட விடாத அளவிற்குத் தாங்கு தாங்கென்று தாங்கினாள். பிரசவத்தில் திடீர்ச் சிக்கல் தாய் - சேய் இருவரில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும் என்று மகப்பேறு மருத்துவர் கைவிரித்துவிட…
'விசா… பெண் குழந்தைன்னு என் மனசு சொல்லுது. பிரகதின்னு பேரு வையி… அண்ணாவும், குழந்தையும் இனி உன் பொறுப்பு' என்பதுதான் அருளரசி பேசிய கடைசி வார்த்தைகள்.
அன்றிலிருந்து பிரகதியை கண்ணும், கருத்துமாக வளர்த்து… இதோ திருமண வயதில் பிரகதி.
என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் இந்தக் கால நவநாகரீக மோகங்களுக்கு அடிமையானதற்கு பிரகதியும் விதிவிலக்கில்லாமல்தான் இருந்தாள்.