சிறுகதை: கருவேப்பிலை

Tamil short story
Tamil short storyImage credit: AI
Published on
Mangayar Malar
Mangayar Malar

“ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை.

“என்னது? எத்தனை தடவை சொல்றது, தியானம் பண்ணும்போது இடைஞ்சல் செய்யாதேன்னு... கேட்கவே மாட்டியா! நீயே போய் வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு கண்களை மூடி தனியறையில் தியானத்தைத் தொடர்ந்தான் இராமன்.

“இவக, எதுக்குத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டாங்களோ? கட்டுன பொஞ்சாதிக்கு ஒரு கருவேப்பிலைக் கூடவா வாங்கி தர முடியாது? நான் என்ன, நகைநட்டா வாங்கி தாங்க-ன்னு கேட்டேன்” முனகியபடியே கடைக்கு போக தயாரானாள்.

'கடைக்கு போனால், திரும்பிவர கால்மணி நேரமாவாது ஆகும். அதுவரைக்கும் கேஸ் ஸ்டவ் எரியவிட்டா, கேஸ் விரயமாகும். நாற்பது நாள் வர்றது, முப்பது நாள்லேயே தீர்ந்திடும். அதுக்கும் அவர்கிட்ட மல்லுக்கட்டணும்'-ன்னு கேஸ் ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு, கருவேப்பிலை வாங்க கடைக்கு போனாள்.

கடைக்கு போன சீதை, எதிரில்பட்ட மாலா, கீதா, ரமா, தோழிகளிடம் பேசிவிட்டு, கருவேப்பிலை வாங்கிவர, அரைமணி நேரமாகி விட்டிருந்தது. மறுபடியும் கேஸ் ஸ்டவ் பற்றவைத்து 'கருவேப்பிலை' மணக்க சமையலில் மும்முரமானாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காதல் வாழப் பொய்யும் சொல்வோம்!
Tamil short story

தியானத்தை அரைகுறையாக முடித்து கொண்டு கண்களைத் திறந்தவனின் எதிரிலிருந்த சுவர்கடிகாரம் மணி எட்டைக் காட்டியது.

அரக்க பரக்க எழுந்து, “அடியே சீதா, சமையல் ஆச்சா, ஆபிஸ்க்கு லேட்டாச்சு, சீக்கிரமா கிளம்பணும்…."

ஆர்ப்பாட்டத்தோடு, காலை டிபனை வாயில் திணித்து, அரைகுறையாக மென்று விழுங்கி, மதிய சாப்பாட்டை கட்ட சொல்லி ஆபிசுக்கு கிளம்பினான்.

போகிற வழியில் “சே, இன்னைக்கு தியானத்துல ஒக்காரும்போதே,"கருவேப்பிலை வாங்கிவா"ன்னு முட்டுக்கட்டைப் போட்டா சீதா. ஆதனால, இன்னைக்கு திருப்தியே இல்லே” என்று மனதுக்குள் பேசிக் கொண்டான்.

"ஆறுமணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்து, குளித்து, தியானத்தில் ஒக்காரும்போதுதான் 'கடைக்கு போய் பால் வாங்கியா ! கருவேப்பிலை வேணும், பரண்ல இருக்கிற பாத்திரத்தை எடுத்துக் கொடு'-ன்னு குடைசல் கொடுக்கறா சீதா.

உண்மையிலேயே, தியானத்தைப் பத்தி சீதாவுக்கு தெரியலையா? இல்லே, 'நாம மட்டும்….மாங்கு…மாங்குன்னு சமையல் கட்டுல வேலை செய்யறோம், இவர் மட்டும் தியானம்ங்கற பேர்ல சொகுசா ஒக்காந்துண்டு, ஏமாத்தறாரு'ன்னு நினைக்கறாளோ” என்றும் நினைத்து கொண்டான்.

“நாம பண்ற தியானத்துக்கு, சீதாவால இடையூறு வரக்கூடாது, யார்கிட்ட யோசனைக் கேட்கலாம்?"-ன்னு நினைச்சிகிட்டிருக்கும் போதே…

"சீதா, திவ்ய மஹாலில் ஒரு சாமியார் வந்திருக்காராம். பிரச்னைன்னாலும், உடனே தீர்த்து வைச்சு, ஆசிர்வதித்து அனுப்புறாராம். நான் பார்க்க போறேன், நீயும் துணைக்கு வாயேன்...” தோழிகளின் பேச்சு இராமனின் காதில் விழுந்தது.

“அட, இதுகூட நல்ல யோசனைதான், சீதாவைக் கூட்டிபோய், சாமியார்கிட்ட அறிவுரை சொல்ல சொல்லி, தியானத்துக்கு இடையூறு இல்லாம இருக்க வழி பண்ணனும்"ன்னு தீர்மானித்தான். மறுநாள் ஆபிசுக்கு லீவு எழுதிக் கொடுத்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி...?
Tamil short story

திவ்ய மஹாலில், காலையிலேயே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. கூட்டம் நீண்டு கொண்டேயிருந்தது. வரிசையில், இராமனும், சீதாவும் நின்றுநெளிந்து…நெளிந்து சென்று வெகுநேரத்திற்கு பிறகு சாமியாருக்கு அருகில் சென்று விட்டார்கள்.

சாமியாரை வணங்கி “சாமி, நான் தினமும் காலையில் தியானம் செய்கிறேன். அப்பொழுதுதான் இவள் “கருவேப்பிலை வாங்கி வா, பால் வாங்கி வந்தியா, பரண்மேல இருக்கிற பாத்திரத்தை எடுத்து கொடு, பாத்திரத்தை பரண்மேல எடுத்து வை-ன்னு அற்ப விஷயங்களுக்காக, என்னுடைய தியானத்தைக் கெடுக்கிறாள். நீங்கதான் அறிவுரை சொல்லி ஆசிர்வதிக்கணும்-ன்னு“ கைக்கட்டி வணங்கி நின்றான்.

“உன் மனைவிக்கு நான் அறிவுரை சொல்லும்போது, நீ வெளியே இருப்பா” என்று இராமனை அனுப்பி விட்டார்.

சாமியார், சீதாவைப் பார்த்தார்.

சீதாவோ, மெல்லிய சிரிப்பை சிந்தினாள். மனதுக்குள் “இவரே, குடும்ப பொறுப்பை சுமப்பதற்கு பயந்துதானே கல்யாணமே வேணாம்ன்னு, சாமியாரானார்? இவரென்ன நமக்கு அறிவுரை சொல்வது," என்று நினைத்தாள்.

சீதாவின் எண்ண ஓட்டத்தைப் படித்து விட்டார் சாமியார்.

“அம்மையே, நீ என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதெல்லாம் போட்டு குழப்பிக்காதே. உன் புருஷன் தியானம் பண்ணும் போது, இடைஞ்சல் செய்யாதே! ஏன்னா, அவர் பண்ற தியானத்தின் பலன்களில் பாதியளவு தானாகவே உனக்கு சேர்ந்திடும், இதுதான் பெண்களுக்கு உரிய வரப்பிரசாதம். பெண்கள் செய்யும் அர்ப்பணிப்பான வேலைகள், தியானத்திற்கு ஈடானவைதான். தனியாய் தவம், தியானம் செய்ய தேவையில்லை, நீடுழி வாழ்க," என்று ஆசிர்வதித்து, “உன் புருஷனை வரச்சொல்” என்றார்.

சாமியாரின் அருகில் பவ்யமாய் கைக்கட்டி நின்றிருந்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; விஷக்கொட்டு!
Tamil short story

“மகனே, குடும்ப வாழ்க்கைய ஏத்துகிட்ட பிறகு எல்லாத்துலேயும் சரிசமமாக நடந்துக்க வேண்டும். சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்து அதில் அவங்களுக்கு ஏற்படுத்துற சந்தோஷத்தைப் பார்க்குறதுதான் உண்மையான தியானம். நீ தியானத்துல அனுபவிக்கிற அனுபூதி தன்மையை விட ஆயிரம் மடங்கு மேலானதாகும். கடவுள் ஆசி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.

இராமனின் முகம் தெளிவாய் மாறியது. வெளியே வந்தான். சீதாவின் கரத்தைப் பற்றி கொண்டு நடந்தான். அந்த நிமிடத்திலிருந்து அவனது தியானம் சீதாவுக்கு உதவி செய்வதில் திரும்பியது. இனி கருவேப்பிலை என்ன, காஷ்மீருக்கு கூட்டிகிட்டு போ என்று அவள் சொன்னாலும் தப்பாமல் செய்வான் ராமன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com