

‘அனன்யாவுக்கு விபத்து’ என்ற அதிர்ச்சித் தகவல் தெரிந்த அடுத்த நொடியே என் அலுவலக ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் ஏறிவிட்டேன்.
தகவல் சொன்னது அம்மா. ஓரளவுக்கு மேல் அவளுக்கும் கூடுதல் விவரங்கள் தெரியவில்லை. தெரிந்ததை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க நொந்து போய் போனை வைத்துவிட்டேன்.
மனைவி கஸ்தூரியை போனில் அழைக்க… அவள் அட்டென்ட் செய்யவில்லை. ஒருவேளை மருத்துவமனையில் பதட்டத்தில் அலைந்து கொண்டிருப்பாளோ? தொந்தரவு என போனை சைலன்ட்டில் போட்டுவிட்டாளா? இல்லை, ஒருவேளை என் மேலான கோபம் காரணமாக இருக்குமா?
விபத்து அவள் படிக்கும் பள்ளியில் நடந்திருக்கிறது. விளையாட்டு பாட வேளையில். வாலிபால் பயிற்சியின் போது ஏதோ சிக்கல் ஆகி, கீழே விழுந்ததில் இவளுக்கு காலில் பிரச்னையாகியிருக்கிறது. அருகில் இருந்த பீடீ டீச்சர் கல்யாணி இவளை உடனே கவனித்து முதலுதவிக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று... என் மனைவிக்கு கையோடு தகவல் சொல்லி...
‘அய்யோ அனன்யா செல்லம்.. நீ வலியை எப்படித் தாங்கிக் கொண்டாய்?’ என்னையும் அறியாமல் கண்களில் நீர் தேங்கி நின்றது.
நான் ராஜாவோ இல்லையோ அவள் என் செல்ல இளவரசி தான். ஏழாவது படிக்கிறாள். இன்னும் பெரியவளாக இல்லை. (அவள் அம்மாவுக்கு அது வேறு ஒரு விசனம்)