

சேனாபதியின் திருமண வரவேற்புக்கு சென்ற போது அங்கு நான் கண்ட காட்சி என்னை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது.
திருமணம் செய்தால் ஒல்லியான பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கணக்கிலடங்கா பெண்களைப் பார்த்து, 'வேண்டாம் வேண்டாம்' என்று சொன்ன சேனாபதி, நல்ல குண்டான ஒரு பெண்ணுடன் வரவேற்பில் நின்று கொண்டிருந்தான்.
ஒருவேளை அவனது வீட்டில் கட்டாயப்படுத்தி அவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்களோ என்று நான் அவனைக் கூர்ந்து கவனித்த போது, அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
அருகிலிருந்த நாராயணனிடம், சேனாபதியைக் குறித்து விசாரித்தேன்.
“நாராயணா. ஒல்லிக்குச்சி பொண்ணத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்ன சேனாபதி, குண்டான பொண்ணோட இப்ப இரண்டு கால்ல நிக்கறத பாத்தா எனக்கு சந்தேகமா இருக்கு. காதல் கீதல்ல விழுந்துட்டானா” என்றேன் நான்.
“எனக்கும் அதான்டா ஆச்சரியமா இருக்கு. விசாரிச்ச போது, வீட்டுல பாத்து வச்ச கல்யாணம்தான்.
5 வருஷமா கட்டினா ஒல்லியான பொண்ணத்தான் கட்டுவேன், இல்லேன்னா பிரம்மச்சாரிதான்னு சொன்ன சேனாபதி எப்படி திடீர்னு இந்த மாதிரி மாறிட்டான்னு தெரியல” என்றான் நாராயணன்.
எனது மனதில் சேனாபதியுடனான கல்லூரி காலங்கள் நினைவுக்கு வந்தன.